Paristamil Navigation Paristamil advert login

எரிவாயு விலை மீண்டும் உயர்வு – ஜூலை முதல் புதிய கட்டணம்!!

எரிவாயு விலை மீண்டும் உயர்வு – ஜூலை முதல் புதிய கட்டணம்!!

11 ஆனி 2026 வியாழன் 07:30 | பார்வைகள் : 430


இயற்கை எரிவாயு பயன்படுத்தும் பெரும்பாலான வீடுகளுக்கு ஜூலை 1 முதல் எரிவாயு விலை 7.40 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் PRVG அடிப்படையிலான ஒப்பந்தங்களில் உள்ள நுகர்வோரின் மாதாந்திர கட்டணம் சராசரியாக 2.70 யூரோக்கள் வரை உயரக்கூடும் என பிரான்ஸ் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம்(CRE) தெரிவித்துள்ளது.

தற்போது 10.24 மில்லியன் குடும்பங்கள் இயற்கை எரிவாயு ஒப்பந்தங்களைக் கொண்டுள்ள நிலையில், அதில் சுமார் 60 சதவீத மக்கள் இந்த உயர்வால் நேரடியாக பாதிக்கப்படவுள்ளனர். மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் காரணமாக உலக சந்தையில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன் தாக்கமே ஜூலை மாத எரிவாயு குறிப்பு விலை ஏப்ரல் மாதத்தை விட 18 சதவீதம் அதிகமாகியுள்ளது.

அதேவேளை, நிலையான விலை ஒப்பந்தத்தில் உள்ள மற்ற 40 சதவீத வாடிக்கையாளர்களுக்கும் விநியோக கட்டண உயர்வு காரணமாக சராசரியாக 1.50 சதவீத கட்டண உயர்வு அமல்படுத்தப்படவுள்ளது. எரிவாயு கட்டணத்தில் “விநியோகம்” மற்றும் “பரிமாற்றம்” என்ற இரண்டு முக்கிய பகுதிகளிலும் செலவுகள் உயர்ந்துள்ளதாக CRE தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஜூலை 1 முதல் எரிவாயு விநியோக கட்டணம் 5.87 சதவீதம் உயர்த்தப்படுவதால் அனைத்து வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுவார்கள். 2023ஆம் ஆண்டு அரசின் கட்டுப்பாட்டு எரிவாயு விலை முறை நீக்கப்பட்டதிலிருந்து, PRVG எனப்படும் குறிப்பு விலை சந்தை வழிகாட்டியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.