Paristamil Navigation Paristamil advert login

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் அத்துமீறல்களை மறைக்கும் பாக்: இந்தியா கண்டனம்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் அத்துமீறல்களை மறைக்கும் பாக்: இந்தியா கண்டனம்

10 ஆனி 2026 புதன் 11:14 | பார்வைகள் : 161


ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை மறைக்க பாகிஸ்தான் பொய்யான தகவல்கள் மற்றும் செய்திகளை பரப்பி வருகிறது என மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியுள்ளார்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வணிகர் ஒருவரை பாக்., பாதுகாப்புப் படை சுட்டுக்கொன்றதால், மக்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தை கலைக்க மக்கள் மீது பாதுகாப்புப்படை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 30 பேர் உயிரிழந்த நிலையில், 200 பேர் காயமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுதும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக டில்லியில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் போலி செய்திகள் மற்றும் வீடியோக்களை கண்காணித்து வருகிறோம். தனது சொந்தத் தோல்விகளை மறைக்கவும்,  மனித உரிமை மீறல் பிரச்னையில் திசைதிருப்பவும்  பாகிஸ்தான் செய்யும் வீணான முயற்சி.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போலீசாரின் அடக்குமுறை காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.  பாகிஸ்தானின் தவறான செயல்கள் மற்றும் அத்துமீறல்களுக்கு அந்நாட்டை சர்வதேச சமூகம் பொறுப்பாக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.