Paristamil Navigation Paristamil advert login

பிரதமராக பதவியேற்று 12 ஆண்டுகள் நிறைவு!

பிரதமராக பதவியேற்று 12 ஆண்டுகள் நிறைவு!

10 ஆனி 2026 புதன் 09:06 | பார்வைகள் : 134


4398 நாட்கள் நாட்டின் நீண்ட கால பிரதமராக இருந்த நேருவின் சாதனையை இன்று (ஜூன் 10) பிரதமர் மோடி முறியடிக்கும் நிலையில் மாலை டில்லி பாரத் மண்டபத்தில் பிரமாண்ட கூட்டம் நடைபெற உள்ளது.

2014ம் ஆண்டு மே 26ம் தேதி நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றார். அது முதல் தற்போது வரை அவர் பிரதமராக பொறுப்பில் உள்ளார். 2025ம் ஆண்டு ஜூலை 25ம் தேதியன்று, முன்னாள் பிரதமர் இந்திராவின் மிக நீண்ட நாட்கள் தொடர்ச்சியாக பிரதமராக இருந்தார் என்ற சாதனையை மோடி முறியடித்தார்.

பிரதமராக இந்திரா, 1966ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி முதல் 1977ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி வரை 4077 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்தார். நாட்டின் முதல் பிரதமரான நேரு, 1952ம் ஆண்டு மே 13ம் தேதி முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பதவியேற்றார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக தொடர்ச்சியாக 4,398 நாட்கள் பணியாற்றினார்.

இந்நிலையில் இன்று நாட்டின் நீண்ட கால பிரதமராக இருந்த நேருவின் சாதனையை பிரதமர் மோடி முறியடிக்கும் நிலையில் மாலை டில்லி பாரத் மண்டபத்தில் பிரமாண்ட கூட்டம் நடைபெற உள்ளது. தேஜ கூட்டணி ஆளும் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், மூத்த தலைவர்கள், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பிற முக்கிய மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.

பிரதமர் மோடி தனது 12 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ள நிலையில் அவரது தலைமையின் கீழ் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட கால பிரதமர் பதவி வகித்த சாதனை படைத்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க செனட்டர் ஜான் கார்னின் வாழ்த்து தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த சாதனை படைத்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். மூன்று முறை மக்களாட்சி ஆணையைப் பெற்று, 140 கோடி மக்களின் நம்பிக்கையின் மூலம் 4,399 நாட்கள் தலைமை தாங்கியுள்ளார்.

25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டது முதல் இந்தியாவை உலகின் மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதார நாடாக மாற்றியது வரை, பிரதமர் மோடியின் பதவிக்காலம் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதாக அமைந்துள்ளது. அமெரிக்கா-இந்தியா இடையிலான உறவு முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது,' என்று குறிப்பிட்டுள்ளார்.

மலேசியா பிரதமர் வாழ்த்து

மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியாவின் மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்த பிரதமர் மோடிக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:இந்தியாவின் மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டிய பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்தியாவின் வளர்ச்சி, செழிப்பு மற்றும் உலக அரங்கில் அதன் நிலையை மேம்படுத்துவதில் அவர் பல ஆண்டுகளாக ஆற்றிய அர்ப்பணிப்புள்ள பொதுச் சேவை மற்றும் தலைமைத்துவத்திற்கு இந்தச் சாதனை ஒரு சான்றாக விளங்குகிறது.மலேசியா, இந்தியாவுடனான தனது நெருங்கிய மற்றும் நீண்டகால நட்பை மதிக்கிறது.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும், நமது மக்களுக்கு இடையே உறவை வலுப்படுத்த மேலும் ஆவலுடன் உள்ளேன். பிரதமர் மோடி தொடர்ந்து வெற்றி பெறவும், இந்திய மக்கள் தொடர்ந்து அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புடன் வாழவும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார்.

இது குறித்து துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பாரதத்தின் பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவி வகித்தவர் என்னும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள பிரதமர் மோடிக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வரலாற்றுச் சாதனை என்பது வெறும் பதவிக்காலத்தின் நீளத்தைக் குறிப்பது மட்டுமல்ல; மாறாக, நமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு மாற்றத்திற்கான யுகத்தைப் பிரதிபலிப்பதாகும்.

2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணத்தில், பிரதமர் மோடியின் தலைமை கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தின் ஊற்றாகவும், வழிகாட்டும் சக்தியாகவும் திகழ்கிறது. மனிதகுல மேன்மைக்காக உழைக்கும்  மகத்தான தலைவர்களை  வரலாறு என்றும் மறப்பதில்லை.

அவர்கள் வரலாற்றில் யுகபுருஷர்களாக நிலைபெறுகிறார்கள். தனது தொலைநோக்குத் தலைமையாலும், அர்ப்பணிப்பு மிக்க அயராத உழைப்பாலும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக்காட்டி,பிரதமர் மோடி தற்கால பாரதத்தின் 'யுக புருஷராக' திகழ்கிறார். இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.