Paristamil Navigation Paristamil advert login

இந்தியா வலிமைமிக்க நாடாக மாறுவதை தடுக்க முயற்சி; மோகன் பகவத்

இந்தியா வலிமைமிக்க நாடாக மாறுவதை தடுக்க முயற்சி; மோகன் பகவத்

5 ஆனி 2026 வெள்ளி 09:30 | பார்வைகள் : 284


இந்தியா வலிமைமிக்க நாடாக மாறுவதை விரும்பாத சக்திகளும் இருக்கின்றன. நமது கலாசார விழுமியங்களை பாதிக்கச் செய்து, அவற்றைப் பலவீனப்படுத்தப் பல சக்திகள் முயன்று வருகின்றன,' என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அவர் பேசியதாவது; இந்தியா இப்போது மறுமலர்ச்சியை நோக்கிய திசையில் பயணிக்க வேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற ஆசை அனைவரிடமும் உள்ளது. நமக்குள் பிரிவினையை உருவாக்க நினைக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள். இந்தியா வலிமைமிக்க நாடாக மாறுவதை விரும்பாத சக்திகளும் இருக்கின்றன.

சிறிய விஷயங்களைக் காரணம்காட்டி, அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன. இந்த மதிப்புகளும், மரபுகளும் வலுவடைவது உலக அரங்கில் இந்தியாவின் நிலையை உயர்த்தும் என்பதை உணர்ந்து, நமது கலாசார விழுமியங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கச் செய்து, அவற்றைப் பலவீனப்படுத்தப் பல சக்திகள் முயன்று வருகின்றன. இதைப் பற்றி விரிவாக விவரிக்க வேண்டிய அவசியமில்லை.

ஒட்டுமொத்த சமுதாயமும் தனது சொந்த அடையாளத்தையும், நோக்கத்தையும் பற்றிய தெளிவான புரிதலோடு, இந்த நாட்டின் மற்றும் உலகத்தின் நலனுக்காகச் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது, இவ்வாறு அவர் கூறினார்.