உலகக் கிண்ணத்தை எதிர்கொள்வோம் - இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து
3 ஆனி 2026 புதன் 11:59 | பார்வைகள் : 343
ரி20 உலகக் கிண்ணத்தில் வெற்றிபெறுவதாக இருந்தால் துணிச்சலுடன் அதிசிறந்த ஆட்டத் திறனை வெளிப்படுத்துவது அவசியம். சந்தேகத்துடனும் பீதியுடனும் விளையாட முடியாது. களத்தில் இறங்கி வெளுத்துக்கட்டுவோம் என்ற மன உறுதியுடன் விளையாடுவோம் என்ற நிலைப்பாட்டில் இலங்கை அணி இருக்கிறது என அணித் தலைவி சமரி அத்தபத்து தெரிவித்தார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பத்தாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் பங்குபற்றுவதற்காக இங்கிலாந்து பயணமாவதற்கு முன்னர் ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை 02.06.2026 மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் நடப்பு சம்பியன் நியூஸிலாந்து, முன்னாள் சம்பியன்களான இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளுடன் இரண்டாம் குழுவில் இலங்கை இடம்பெறுகிறது.
பேர்மிங்ஹாமில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த வருடத்துக்கான மகளிர் ரி20 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் வரவேற்பு நாடான இங்கிலாந்தை இலங்கை எதிர்த்தாடவுள்ளது.
இந்த வருட உலகக் கிண்ண அத்தியாயத்தில் இலங்கையினால் சாதிக்க முடியுமா? பலம்வாய்ந்த இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய அணிகளைக் கட்டுப்படுத்த ஏதாவது வித்தியாசமான வியூகங்களைப் பிரயோகிப்பார்களா? என அவரிடம் கேட்டபோது,
நடப்பு சம்பியன் நியூஸிலாந்தையும் இங்கிலாந்தையும் எதிர்கொள்வது எளிதல்ல. இங்கிலாந்து சொந்த நாட்டில் விளையாடுகிறது. அது அவர்களுக்கு அனுகூலமாக அமையும். ஆனால், நாங்கள் வெற்றிபெறுவதாக இருந்தால் நேர்மறையான மனோ நிலையுடன் விளையாடி அதிசிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம். அதனால்தான் சுதந்திரமாக விளையாடுமாறு சக வீராங்கனைகளிடம் நான் கேட்டுக்கொண்டுள்ளேன். ஆடுகளம் நுழைந்து வெளுத்துக் கட்டும் மன உறுதியுடன் இருக்கிறோம்.
நாங்கள் கடந்த 8, 9 மாதங்களில் இங்கிலாந்து செல்லவில்லை. ஆனால், கடந்த வருடம் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வெற்றிகொண்டது எங்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இப்போது எமது அணி சிறந்த மனோநிலையில் இருக்கிறது. திறமையாக விளையாடுவதே எமது குறிக்கோள். எம்மிடம் இருந்த குறைபாடுகளில் பலவற்றை நாங்கள் திருத்திக்கொண்டுள்ளோம். உலகக் கிண்ணத்திற்கு போவதற்கு முன்னர் உலகக் கிண்ணத்துடன் வருவோம் என்று நான் கூறமாட்டேன். அது வெறுமனே கடையில் வாங்கும் பொருளல்ல. போட்டிக்கு போட்டி திறமையாக விளையாட எண்ணியுள்ளோம்.
மகளிர் உலகக் கிண்ண வரலாற்றில் நாங்கள் இதுவரை அரை இறுதிக்கு முன்னேறியதில்லை. இம்முறை அரை இறுதிக்கு செல்வதாக இருந்தால் 3 அல்லது 4 போட்டிகளில் கட்டாயம் வெற்றிபெறவேண்டும். அதற்காக நாங்கள் கடுமையாக முயற்சிப்போம். நாங்கள் அரை இறுதிக்கு சென்றால் அது ஒரு வரலாறாக அமையும். அத்தடன் நாடு என்ற வகையில் அது மகத்தான விடயம். அணியை அரை இறுதிக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதே எனது இலக்கு. அது இலகுவானதல்ல. ஆனால். இந்த உலகக் கிண்ணத்தில் நீண்ட பயணம் செல்ல அதிகபட்ச முயற்சியுடன் விளையாடுவோம்' என்றார்.
இதுகாலவரை இலங்கை அணியின் பந்துவீச்சில் இருந்துவந்த ஒரு வேகப்பந்துவிச்சாளர், 3 அல்லது நான்கு சுழல்பந்துவீச்சாளர்கள் என்ற வியூகம் இம்முறை மாறும் என சமரி அத்தபத்து கூறினார்.
எமது புதிய பயிற்றுநர் ஜெமி சிடன்ஸ் நேர்மறையான போக்கு கொண்டவர். எமது அணியில் தொடர்ச்சியாக இருந்து வந்து பந்துவீச்சு வியூகத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என எடுத்துரைத்த முதலாவது பயிற்றுநர் அவர்தான். இனிமேலும் சுழல்பந்துவீச்சில் நம்பியிராமல் அணியில் வேகப்பந்துவீச்சாளர்களின் எண்ணிக்கையை 3ஆக அதிகரிக்க வெண்டும் என அவர் தெரிவித்தார். அதற்கு அமைய இம்முறை நாங்கள் 3 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழல்பந்தவீச்சாளார் என்ற வியூகம் பின்பற்றப்படவுள்ளது. அதாவது இம்மறை 7 துடுப்பாட்ட வீராங்கனைகள். 3 வேகப்பந்துவீச்சாளர்கள், ஒரு சுழல்பந்துவீச்சாளர் ஆகியோர் இறுதி அணியில் இடம்பெறுவர். அணியில் இருவர் துடுப்பாட்ட சகலதுறை வீராங்கனைகளாகவும் ஒருவர் வேகப்பந்துவீச்சு சகலதுறை விராங்கனையாகவும் விளையாடுவர். எனவே இம்முறை சமபலம் கொண்ட அணி களம் இறங்கும். ஒவ்வொரு போட்டியிலும் 160, 170 ஓட்டங்களுக்கு மேல் பெறுவதை குறியாகக் கொண்டு துடுப்பாட்டத்தில் ஈடுபடுவோம்' என சமரி அத்தபத்து மேலும் தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan