Paristamil Navigation Paristamil advert login

தெருவோர வியாபாரிகளின் வாழ்வை மாற்றிய பி.எம்., ஸ்வாநிதி திட்டம்: பிரதமர்

தெருவோர வியாபாரிகளின் வாழ்வை மாற்றிய பி.எம்., ஸ்வாநிதி திட்டம்: பிரதமர்

2 ஆனி 2026 செவ்வாய் 09:41 | பார்வைகள் : 131


மத்திய அரசின் தெருவோர வியாபாரிகளுக்கு குறுங்கடன் வழங்கும் திட்டத்தால், எண்ணற்ற வியாபாரிகளின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது,''என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமுடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக தெருவோர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதை கருத்தில் வைத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 'பி.எம்., ஸ்வாநிதி' என்ற தெருவோர வியாபாரிகளுக்கு குறுங்கடன் வழங்கும் திட்டத்தை, கடந்த 2020, ஜூன் 1ம் தேதி நடைமுறைப்படுத்தியது.

இந்நிலையில் இத்திட்டம் துவக்கி, ஆறு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பிரதமர் மோடி கூறியதாவது:

தெருவோர வியாபாரிகளுக்கான குறுங்கடன் வழங்கும் திட்டம் என்பது வெறும் நிதியுதவி மட்டுமல்ல; அது, நம்பிக்கையுடனும் கண்ணியத்துடனும் ஏழை எளியோருக்கு அதிகாரம் அளிக்கும் திட்டம். நம் நாட்டின் நகர்ப்புற பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்காற்றும் முறைசாரா தொழிலாளர்களாக உள்ள தெருவோர வியாபாரிகளின் வாழ்வை இந்தத் திட்டம் முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது.

வங்கிக்கடன் பெற தகுதியின்றி தவித்த கோடிக்கணக்கான தெருவோர வியாபாரிகளுக்கு, எந்தவித பிணையும் இன்றி எளிதாக கடன் மற்றும் நிதிச்சேவைகளை வழங்குவதை இத்திட்டம் உறுதி செய்துள்ளது. இத்தொழிலாளர்களின் தினசரி உழைப்பு தான் நம் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுவடைய செய்கிறது. தங்கள் உறுதிப்பாட்டாலும் தொழில்முனைவாலும் நம் நாட்டின் பொருளாதாரத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் பயனாளிகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இத்திட்டத்தின் மூலம் தெருவோர வியாபாரிகள் மிக வேகமாக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு மாறியுள்ளனர். இது, அவர்களின் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பி.எம்., ஸ்வாநிதி' திட்டத்தின் மூலம், நாடு முழுதும் இதுவரை 75.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தெருவோர வியாபாரிகள் நேரடியாக பயனடைந்துள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளில், 17,800 கோடி ரூபாய் கடன் தொகையாக வழங்கப்பட்டு, ஏழை எளியோரின் வாழ்வாதாரம் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கால எல்லையை, வரும் 2030ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. வியாபாரிகளுக்கு வழங்கப்படும் கடன் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இத்திட்டத்தில் இணையும் வியாபாரிகளின் குடும்பங்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும் வகையில், பிரதமரின் காப்பீட்டு திட்டங்கள் அளிக்கப்படுகின்றன.