Paristamil Navigation Paristamil advert login

குவைத் மீது ஏவுகணைகளை வீசிய ஈரான்

குவைத் மீது ஏவுகணைகளை வீசிய ஈரான்

1 ஆனி 2026 திங்கள் 13:17 | பார்வைகள் : 200


அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது.

6 வார போருக்கு பின்னர், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் கீழ் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தன.

இரு நாடுகளும் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில், மீண்டும் போர் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர், தெற்கு ஈரானில் உள்ள முக்கிய கடற்படை தளமான பாந்தர் அப்பாஸ் மீதும், ஹார்முஸ் அருகே உள்ள ஈரானிய கடற்படை படகுகள் மீதும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து, சர்வதேச கடல் பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த அமெரிக்காவின் MQ -1 ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது.

இதற்கு பதிலடியாக, நேற்று ஈரானின் கோருக் மற்றும் கெஷ்ம் தீவில் உள்ள ஈரானிய ரேடார் மற்றும் ஆளில்லா விமானங்களுக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு தளங்கள் மீது அமெரிக்கா தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியது.

இதனைத் தொடர்ந்து, குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து ஈரானின் IRGC ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

"எதிரிகளின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நமது வான் பாதுகாப்புப் படைகள் எதிர்கொண்டு வருகின்றன. வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டால், அவை வான் பாதுகாப்பு அமைப்புகள் எறிகணைகளை இடைமறிப்பதன் விளைவுகளே” என குவைத் ராணுவம் தெரிவித்துள்ளது.  

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கும் வகையில், நாடு முழுவதும் அவசரகால சைரன்கள் ஒலித்ததாக அரசு நடத்தும் செய்தி நிறுவனமான KUNA தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த தாக்குதல்களால் மீண்டும் போர் வெடிக்கும் வாய்ப்புள்ளதாக உலகளவில் கவலை எழுந்துள்ளது.