Paristamil Navigation Paristamil advert login

ராஜ்யசபா தேர்தல்: த.வெ.க.,விலிருந்து தேர்வாகப் போவது யார்?

ராஜ்யசபா தேர்தல்: த.வெ.க.,விலிருந்து தேர்வாகப் போவது யார்?

1 ஆனி 2026 திங்கள் 08:20 | பார்வைகள் : 151


நாடு முழுதும் காலியாக உள்ள 26 ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தலுக்கு, இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு பதவிக்கு, த.வெ.க., நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியான நிலையில், அக்கட்சி யாரை நிறுத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

நாடு முழுதும் முழுமையாக பதவிக்காலம் முடிந்த 26 ராஜ்யசபா எம்.பி.,க் களின் பதவிகளுக்கும், ராஜினாமா காரணமாக காலியான இரண்டு ராஜ்யசபா எம்.பி., பதவிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்திலிருந்து அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பதவிக்காலம், 2028 ஜூன் 29ம் தேதி நிறைவடைய இருந்தது.

ந்நிலையில், அவர் சட்டசபை தேர்தலில், விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் போட்டியிட்டார்; தேர்தலில் வெற்றி பெற்றார். ஒரே நேரத்தில் இரு பதவிகளில் இருக்க முடியாது என்பதால், தன் ராஜ்யசபா எம்.பி., பதவியை, கடந்த மாதம் 7ம் தேதி ராஜினாமா செய்தார்.

அதேபோல, மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வான சுனேத்ரா அஜித் பவார் அம்மாநில துணை முதல்வரானதால், இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வானார்.

அதனால், அவரும் தன் எம்.பி., பதவியை, கடந்த மாதம் 6ம் தேதி ராஜினாமா செய்தார். இவர் ராஜினாமா செய்த எம்.பி., பதவிக் காலம், 2028 ஜூலை 4ல் முடிவடைகிறது.

எனவே, இவ்விரண்டு ராஜ்யசபா எம்.பி., பதவிக்கும், கடந்த மாதம் 22ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அவற்றுடன், 10 மாநிலங்களில் காலியாக உள்ள 24 ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 26 ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்ய, வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வரும் 8ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள். மறுநாளான 9ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுவை வாபஸ் பெற, 11ம் தேதி கடைசி நாள்.

தேர்தலில் போட்டி இருந்தால், 18ம் தேதி காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். அன்று மாலை 5:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

முதல் எம்.பி.,

தமிழகத்தை பொறுத்தவரை, ஆளுங்கட்சியாக உள்ள த.வெ.க.,வுக்கு 107 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அத்துடன் அரசுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையை கணக்கிட்டால், 121 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. எனவே, த.வெ.க., சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்படுவது உறுதி.

இந்த தேர்தல் வழியே, த.வெ.க., சார்பில் முதல் எம்.பி.,யை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ள ஜோதிடர் ரத்தன் பண்டிட் அல்லது விஷ்ணு ரெட்டி ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

மேலும் சிலரும் அப்பதவிக்கு காய் நகர்த்தி வருகின்றனர். அதேநேரம், காங்கிரஸ் கட்சி சார்பில், பிரவீன் சக்கரவர்த்திக்கு அப்பதவியை கேட்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், அக்கட்சிக்கு எம்.பி., பதவியை வழங்க, த.வெ.க., நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, விஜய் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது, அக்கட்சியினரிடம் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.