Paristamil Navigation Paristamil advert login

கொங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ் - 246 பேர் உயிரிழப்பு

கொங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ் - 246 பேர் உயிரிழப்பு

31 வைகாசி 2026 ஞாயிறு 04:47 | பார்வைகள் : 158


ஆப்பிரிக்கா ஜனநாயக கொங்கோ குடியரசில் எபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால், அந்நாட்டின் சுகாதார நிலைமை குறித்து சர்வதேச மட்டத்தில் கடும் கவலை எழுந்துள்ளது.

எபோலா பரவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை அதிகளவிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளது முன்னெப்போதும் இல்லாத நிலை என ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ (MSF) அமைப்பின் துணை இயக்குநர் ஆலன் கோன்சலஸ் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, எபோலா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதுடன், குறைந்தது 246 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

அண்டை நாடான உகாண்டாவிலும் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நிலைமையின் தீவிரத்தை அடுத்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ், மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இட்டூரி மாகாணத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுக்களுடன் கலந்துரையாடிய அவர், வைரஸ் பரவலைத் தடுக்க பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தினார். குறிப்பாக, எபோலாவால் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தொடுவது போன்ற சில பாரம்பரிய இறுதிச்சடங்கு வழக்கங்கள் தொற்று பரவலை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரித்தார்.

இதற்கிடையில், எல்லைகள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாலும், நாட்டில் தொடரும் ஆயுத மோதல்களாலும் மனிதாபிமான உதவிகள் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குவதில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது பரவி வரும் எபோலா வைரஸ், ‘புந்திபுகியோ’ எனப்படும் அரிய வகை திரிபாகும். இதற்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி இதுவரை கண்டறியப்படவில்லை.

மேலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, கொங்கோவில் இருந்து சமீபத்தில் திரும்பிய 37 வயதுடைய ஒருவருக்கு எபோலா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர் பிரேசிலின் சாவ் பாலோ மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.