Paristamil Navigation Paristamil advert login

இலங்கை வந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இலங்கை வந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

30 வைகாசி 2026 சனி 18:48 | பார்வைகள் : 171


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நான்கு கிலோகிராமிற்கும் அதிகமான ‘குஷ்’ரகப் போதைப்பொருளைக் கடத்தி வந்த இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விமான நிலையக் கிளை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இன்று (30) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் இருவரும் வலையமைப்பிற்குள் சிக்கியுள்ளனர்.

விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் சந்தேகத்திற்குரிய முறையில் நடமாடிய நபர் ஒருவரை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 4 கிலோகிராம் 104 கிராம் எடையுடைய ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட உடனடி விசாரணைகளின் அடிப்படையில், குறித்த போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாகச் செயல்பட்ட மற்றும் அதனைப் பொறுப்பேற்க வந்திருந்த மற்றொரு சந்தேகநபரும் விமான நிலைய வளாகத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் நீர்கொழும்பு மற்றும் கல்கிசை  ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த போதைப்பொருள் சர்வதேச கடத்தல் கும்பல் ஒன்றிடமிருந்து கொண்டுவரப்பட்டதா மற்றும் இதன் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் யார் என்பது குறித்துப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.