Paristamil Navigation Paristamil advert login

சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் வன்னி அரசு

சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் வன்னி அரசு

30 வைகாசி 2026 சனி 12:36 | பார்வைகள் : 144


'தாட்கோ' ஆய்வு கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., சிந்தனைச்செல்வன் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையை உள்ளடக்கிய, சமூக நீதித்துறை அமைச்சராக, வி.சி.க., துணை பொதுச் செயலர் வன்னி அரசு, பதவியேற்றார்.

அமைச்சரான பின், தாட்கோ எனப்படும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக அதிகாரிகளுடன், கடந்த 26ம் தேதி, அவர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தாட்கோ தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், தாட்கோ மேலாண் இயக்குநர் கந்தசாமி தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும், வி.சி.க., எம்.பி., ரவிக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., சிந்தனைச் செல்வன் ஆகியோரும் பங்கேற்றனர்.

அரசு விதிகளின்படி, அதிகாரப்பூர்வ பொறுப்பில் இருப்போர் மட்டுமே துறைசார்ந்த உள் ஆய்வு கூட்டங்களில் பங்கேற்க வேண்டும். ஆனால், அப்படி அல்லாத அரசியல் பிரமுகர்களும் தாட்கோ ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றதால் சர்ச்சை வெடித்துள்ளது.

இப்படியான விதி மீறல்கள், துறையின் ரகசியத்தன்மை, நிர்வாக பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளதாக, துறை அலுவலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில், அமைச்சர் வன்னி அரசுவும், தாட்கோ மேலாண் இயக்குநரும் விளக்கம் தர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.