Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மாணவர்களிடையே பரவும் மூளைக்காய்ச்சல் ! கல்வி அமைச்சு பிறப்பித்த உத்தரவு!

இலங்கையில் மாணவர்களிடையே பரவும் மூளைக்காய்ச்சல் ! கல்வி அமைச்சு பிறப்பித்த உத்தரவு!

29 வைகாசி 2026 வெள்ளி 18:26 | பார்வைகள் : 408


இலங்கையின் சில மாவட்டங்களில் எண்டெரோ வைரஸ் மெனிஞ்சைடிஸ் எனும் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் ஊடாக அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அவசர சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சிறுவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை அதிகம் பாதிக்கும் இந்த வைரஸ் காய்ச்சல், கடந்த ஏப்ரல் மாதம் மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பிரதேசத்தில் முதன்முறையாக இனங்காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் இந்த நோய் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுநோயியல் மற்றும் சூழலியல் ஆய்வுகளின்படி, பாடசாலை மாணவர்கள் மத்தியில் இந்தநோய் அதிகளவில் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, வைரஸ் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காகப் பாடசாலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மாணவர்கள் உணவு உட்கொள்ளும் முன்பும், கழிவறைகளைப் பயன்படுத்திய பின்னரும் சவர்க்காரம் கொண்டு கைகளைச் சுத்தமாக கழுவுதல், பாடசாலை வளாகங்களைச் சுத்தமாகப் பேணுதல் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளின் சுகாதாரத்தைப் பலப்படுத்துதல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மாணவர்களுக்குக் காய்ச்சல், தலைவலி, கழுத்து வலி அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவர்களை உடனடியாகப் பாடசாலையிலிருந்து விடுவித்து மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்குமாறும்,ஏதேனும் வகுப்பில் இத்தகைய அறிகுறிகள் உள்ள மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டால், பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிக்கு உடன் அறிவிக்குமாறும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தைத் தவிர்த்து, சுகாதார வழிகாட்டல்களைச் சரியாகப் பின்பற்றுவதன் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.