Paristamil Navigation Paristamil advert login

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது சாத்தியமில்லை - ஈரான் தெரிவிப்பு

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது சாத்தியமில்லை - ஈரான் தெரிவிப்பு

23 சித்திரை 2026 வியாழன் 15:00 | பார்வைகள் : 332


அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அத்துமீறல்கள் தொடரும் வரை, உலகின் மிக முக்கிய கடல் வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது சாத்தியமில்லை என ஈரானின் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காலிபாஃப்,

"அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை உலகப் பொருளாதாரத்தையே பிணைக் கைதியாக வைப்பதற்குச் சமம். போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா அப்பட்டமாக மீறி வருகிறது," என குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தாலும், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அது சாத்தியமில்லை என ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் இரண்டு சரக்குக் கப்பல்களை அதிரடியாகச் சிறைபிடித்துள்ளது.

'எம்.எஸ்.சி பிரான்செஸ்கா' மற்றும் 'எபமினோண்டாஸ்' ஆகிய இரு கப்பல்களையும் ஈரானிய கமாண்டோக்கள் தாக்கிச் சிறைபிடித்தனர்.

இக்கப்பல்கள் தங்களது இருப்பிடத்தை மறைத்து இரகசியமாகத் தப்பிக்க முயன்றதால், "ஆய்வுக்காக" பிடிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய புரட்சிகர இராணுவம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சொந்தமான 'யுபோரியா' கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், அது தற்போது அமீரகத் துறைமுகத்தில் பாதுகாப்பாக நங்கூரமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று முதல் காலவரையற்ற போர் நிறுத்த நீட்டிப்பை ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்காகப் பாகிஸ்தான் செல்ல வேண்டிய துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இன்னும் அமெரிக்காவிலேயே தங்கியுள்ளார்.

இது தொடர்பில் வெள்ளை மாளிகை ஊடகப்பேச்சாளர் கரோலின் லெவிட்,

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தற்போது மிகவும் வலுவான நிலையில் இருக்கிறார். ஈரான் மிகவும் பலவீனமடைந்துள்ளது. இந்தப் போர் எப்போது முடிய வேண்டும் என்பதை ஜனாதிபதி ட்ரம்ப் மட்டுமே தீர்மானிப்பார்," என அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.