Paristamil Navigation Paristamil advert login

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெண் ஊடகவியலாளர் உட்பட 5 பேர் பலி!

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெண் ஊடகவியலாளர் உட்பட 5 பேர் பலி!

23 சித்திரை 2026 வியாழன் 14:56 | பார்வைகள் : 312


தெற்கு லெபனானில் இஸ்ரேல் நேற்று புதன்கிழமை (22) நடத்திய தாக்குதல்களில் பெண் ஊடகவியலாளர் உட்பட 5 பேர் உயிரிழந்ததோடு மேலும் ஒருவர் காயமடைந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

லெபனான் பத்திரிகை நிறுவனமொன்றில் பணியாற்றிய அமல் கலீல் என்ற ஊடகவியலாளரே தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அட்- திரி என்கிற கிராமத்தில் வாகனம் ஒன்றைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக லெபனானில் வெளியாகும் நெஷனல் நியூஸ் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தாக்கப்பட்ட அந்த வாகனத்தில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் யோமோர் நகரில் நடத்தப்பட்ட இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் மேலும் இருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அந்தத் தாக்குதலில் வாகனங்கள் சேதமடைந்ததாகவும், ஒரு வாகனத்தினுள் இருந்த பெண் ஊடகவியலாளர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகிறது.

மற்றுமொரு நபர் தாக்குதலின்போது இடிபாடுகளுக்குள் சிக்கிக் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று வியாழக்கிழமை (23) வொஷிங்டனில் லெபனான் - இஸ்ரேல் போர்நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கும் நிலையிலேயே நேற்று இஸ்ரேல் லெபனானில் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு லெபனான் அமைச்சர் பால் மார்கோஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.