Paristamil Navigation Paristamil advert login

மன்னாரில் விபத்தில் உயிரிழந்த பெண்குழந்தை - சடலம் தோண்டி எடுப்பு

மன்னாரில் விபத்தில் உயிரிழந்த பெண்குழந்தை - சடலம் தோண்டி எடுப்பு

21 சித்திரை 2026 செவ்வாய் 18:20 | பார்வைகள் : 358


மன்னார் தாராபுரம் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள துருக்கி சிற்றி பகுதியில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்த ஒரு வயது ஏழு மாதமேயான பெண்குழந்தையின் சடலம் மன்னார் தாராபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மரணம் தொடர்பாக முறையான விசாரணையை நடத்துவதற்காக, மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய இன்று செவ்வாய்க்கிழமை (21) குழந்தையின் சடலம் மீண்டும் தோண்டி வெளியே எடுக்கப்பட்டது.

துருக்கி சிட்டி பகுதியில் கடந்த 18ஆம் திகதி மாலை வேளையில் பாண் விற்பனைக்காக சென்றுகொண்டிருந்த, மின்களத்தில் இயங்கும் முச்சக்கரவண்டியில் அக்குழந்தை மோதுண்டது.

வீட்டு வளவில் இருந்து வெளியே வந்தபோதே குழந்தை விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, குழந்தையை உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அந்த வைத்தியசாலையில் சடலம் தொடர்பான மேலதிக விசாரணை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பின்னர் குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன் பின்னர், கடந்த 19ஆம் திகதி தாராபுரம் மயானத்தில் குழந்தையின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

மன்னார் பொலிஸ் தரப்பினர் இந்த மரணம் தொடர்பாக முறையான விசாரணைகளை நடத்தாமல் குழந்தையின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்த நிலையில, சடலம் அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டது.

சந்தேகத்தின் அடிப்படையில் எழுந்த முறைப்பாடு, மன்னார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இந்நிலையில் குறித்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடத்திய நீதவான், இன்றைய திகதியில், மேலதிக முறையான விசாரணைகளுக்காக குழந்தையின் சடலத்தை தோண்டி எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவின்படி, இன்றைய தினம் காலை நீதவான் முன்னிலையில் குழந்தையின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

சடலம் தோண்டி எடுக்கப்பட்டபோது, மன்னார் பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் உள்ளடங்கலாக பொலிஸார் மற்றும் அனைத்துத் தரப்பினரும் மயானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.