Paristamil Navigation Paristamil advert login

இலங்கை தமிழர்களின் வாழ்வை மேம்படுத்த நலத்திட்டங்களை அறிவித்தார் ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்களின் வாழ்வை மேம்படுத்த நலத்திட்டங்களை அறிவித்தார் ராதாகிருஷ்ணன்

21 சித்திரை 2026 செவ்வாய் 11:05 | பார்வைகள் : 248


இலங்கை சென்றுள்ள நம் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், அந்நாட்டில் வசிக்கும் தமிழர்களின் வாழ்வை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார்.

நம் அண்டை நாடான இலங்கைக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் சென்றார். சுற்றுப்பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயகேவை சந்தித்து பேசினார்.

அப்போது இருதரப்புக்கு இடையே சுகாதாரம், சமூக மேம்பாடு, எரிசக்தி, புனர்வாழ்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதைத்தொடர்ந்து, இலங்கை பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியாவை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இலங்கை கல்வித்துறையில் இருநாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடினார்.

மேலும், இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் கல்வி அறக்கட்டளையின் கல்வி உதவித்தொகை திட்டத்தை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.

இதையடுத்து, மத்திய மாகாணத்தின் நுவரெலியாவில் உள்ள இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பயனடைந்த அந்நாட்டு தமிழ் சமூகத்தினருடன் ராதாகிருஷ்ணன் கலந்துரையாடினார்.

அதன்பின் இலங்கையில் உள்ள சீதா அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்ட துணை ஜனாதிபதி, தன் இரண்டு நாள் அரசு பயணத்தை நிறைவு செய்து, டில்லிக்கு புறப்பட்டார்.
அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள்

1. ஓ.சி.ஐ. அட்டை சலுகை: இலங்கையில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் நலனுக்காக, அவர்களுக்கான, ஓ.சி.ஐ., எனப்படும், இந்திய வெளிநாட்டு குடியுரிமைக்கான அட்டையின் தகுதி நீட்டிப்பு; அதை பெறுவதற்கான செயல்முறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது. 
2. வீட்டு வசதி திட்டம்: இலங்கை தமிழர்கள் பயனடையும் வகையில் இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின்கீழ் மத்திய அரசு ஒதுக்கிய 1,835 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வீடுகள் அங்குள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 
3. ரயில் சேவை சீரமைப்பு: டிட்வா புயலுக்கு பின் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுவாழ்வு திட்டங்களின் ஒரு பகுதியாக வடக்கு ரயில்வே பாதையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ரயில் சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன. 
4. பெய்லி பாலங்கள்: டிட்வா புயலுக்குபின் மறுவாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கண்டியில் ஒன்றும்; ஊவா மாகாணத்தில் இரண்டு என மொத்தம் மூன்று பெய்லி பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. 
5. முல்லைத்தீவில் நவீன மருத்துவமனை: இலங்கையின் முல்லைத்தீவில் நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய நான்கு மாடி மருத்துவமனை கட்டடம் அமைக்க ஒப்பந்தம். 
6. கிழக்கு மாகாண மேம்பாடு: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பெண்கள் மேம்பாட்டிற்கான பயிற்சி மையங்கள் நிறுவப்பட உள்ளன. மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளுக்கான பிரிவுகள் அமைக்க ஒப்பந்தங்கள் 
7. கல்வி உதவித்தொகை: சிலோன் எஸ்டேட் தொழிலாளர் கல்வி அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர் கல்விக்கு உறுதுணையாக இருக்கும். 
8. வனவிலங்கு பாதுகாப்பு: இந்தியா தலைமையிலான சர்வதேச புலிகள் கூட்டமைப்பில் இலங்கையும் இணைந்துள்ளது. இதன்மூலம் புலி, சிறுத்தை போன்ற விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு வழிவகுக்கும்.