Paristamil Navigation Paristamil advert login

கொடுத்த காசுக்கு மேல கூவாதீங்க; தேர்தல் பிரசாரத்தில் கமலை சாடிய அண்ணாமலை

கொடுத்த காசுக்கு மேல கூவாதீங்க; தேர்தல் பிரசாரத்தில் கமலை சாடிய அண்ணாமலை

20 சித்திரை 2026 திங்கள் 11:28 | பார்வைகள் : 284


கமல்ஹாசன், வாங்கின காசுக்கு அளவாக கூவுங்கள். கொடுத்த காசுக்கு மேல கூவாதீங்க என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.

திருவாரூர் சட்டசபை தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் கோவி சந்துருக்கு ஆதரவாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் அண்ணாமலை பேசியதாவது: திமுக கூட்டணிக்கு போடும் ஓட்டு, இந்திய இறையாண்மைக்கு எதிராக போடும் ஓட்டு.

ஐயா கமல்ஹாசன், வாங்கின காசுக்கு அளவாக கூவுங்கள். ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்தான். தேர்தல் பிரசார செலவுக்கு ஒரு நோட்டு வைத்தான், அதுக்கு மட்டும் கூவினால் போதும், கொடுத்த காசுக்கு மேல கூவாதீங்க, என்றார்.

தேர்தல் பிரசார புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் உற்பத்தி அடிப்படையில் பார்த்தால் கடைசி இரண்டு இடங்களிலும், மனித வளர்ச்சி குறியீட்டில் கடைசி 5 இடங்களிலும் உள்ள மாவட்டம் திருவாரூர். கடந்த 30 ஆண்டுகளாக, திமுக சட்டசபை எம்எல்ஏவை கொண்டுள்ள திருவாரூர் மாவட்டத்தில் வளர்ச்சிக்கான அடித்தளம் கூட அமைக்கப்படவில்லை என்பது எவ்வளவு மோசமான நிலை.

இந்நிலை மாறி திருவாரூர் மாற்றம் காணவேண்டும் என்றால் திமுகவை நாம் விரட்டியடிக்க வேண்டியது மிகவும் அவசியம். திருவாரூரில் உள்ள பிரச்னையே பூண்டி கலைவாணன் தான். கொலை மற்றும் ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்படும் ஒருவரை திமுக தனது வேட்பாளராக அறிவித்திருப்பது வெட்கக்கேடான செயல். கடந்த 5 ஆண்டுகளாக, நெல் கொள்முதல் செய்வதில் இருந்து, தேவையான கிடங்குகள் அமைப்பது வரை அனைத்திலும் விவசாயிகளை வஞ்சித்து விவசாயிகளுக்கு எதிரான தீயசக்தி திமுக துரோகம் செய்தது.

திருவாரூர் பெருமையை மீட்டெடுக்கவும், விவசாயிகள் நலன் காக்கவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜ வெற்றி வேட்பாளர் கோவி சந்துருவை பெருவாரியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் திருவாரூர் மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லட்டும்; திருவாரூர் தொகுதி திருப்பம் காணட்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.