Paristamil Navigation Paristamil advert login

எப்படி ஒப்புக்கொண்டார் நிதிஷ் குமார்?

எப்படி ஒப்புக்கொண்டார் நிதிஷ் குமார்?

19 சித்திரை 2026 ஞாயிறு 13:04 | பார்வைகள் : 286


பீஹாரின் முதல்வராக அதிக காலம் இருந்தவர் நிதிஷ் குமார். 2000ல் இருந்து முதல்வர் பதவில் இருந்தவர். அப்படியிருக்க, திடீரென முதல்வர் பதவியை ராஜினாமா செய்து ராஜ்யசபா எம்.பி.,யானது, அவருக்கு நெருக்கமானவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முந்தைய சட்டசபை தேர்தலில், 43 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், கடந்தாண்டு நடந்த தேர்தலில், 85 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியான பா.ஜ., 89 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

பிரசாரத்தின் போது, 'நிதிஷ் குமார் தான் முதல்வர்' என, பா.ஜ.,வும், ஐக்கிய ஜனதா தளமும் பிரசாரம் செய்தன. எதிர்க்கட்சிகளோ, 'நிதிஷ் குமார் சிறிது காலம் தான் முதல்வராக இருப்பார். அதன்பின், பா.ஜ.,வைச் சேர்ந்தவர் தான் முதல்வராவார்' என, பிரசாரம் செய்தனர். அது, இப்போது உண்மையாகி விட்டது.

நிதிஷ் குமார் பதவி விலக உடல்நிலையும் ஒரு முக்கிய காரணம் என, சொல்லப்படுகிறது. அத்துடன், தேர்தல் பிரசாரத்திற்கு முன்பாகவே, பா.ஜ., குறிப்பாக, அமித் ஷா, நிதிஷிடம், 'பிரசாரத்தில் நீங்கள் முதல்வர் என சொன்னாலும், முதல்வர் பதவி பா.ஜ.,விற்கு தான்' என, கறாராக சொல்லி விட்டாராம்.

ஆனால், இதை ஏன் நிதிஷ் கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்க்கவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது. தன் மகனை அரசியலில் ஈடுபடுத்த நிதிஷ் விரும்பவில்லை. ஆனால், அவர் இப்போது ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்ந்துள்ளார்.

துணை முதல்வராக இருந்த பா.ஜ.,வின் சாம்ராட் சவுத்ரி முதல்வராகி விட்டார். இவர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். முதலில் இவர், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் இருந்தார். பின், நிதிஷ் கட்சிக்கு மாறினார். 2017ல், பா.ஜ.,வில் சேர்ந்தார்.

நிதிஷுக்கு மத்திய அரசில் பதவி கிடைக்குமா என்றால், இப்போதைக்கு அவர் ராஜ்யசபா எம்.பி.,யாக மட்டுமே பணியாற்ற விரும்புகிறாராம். 'இனி, பீஹாரில் ஜனதா தளத்திற்கு அஸ்தமனம் ஆரம்பம்' என, எதிர்க்கட்சியினர் பேச துவங்கி விட்டனர்.

எழுத்துரு விளம்பரங்கள்