Paristamil Navigation Paristamil advert login

ஈரான் - அமெரிக்கா இடையே சமரசம் காண பிரித்தானிய பிரதமர் அழைப்பு

ஈரான் - அமெரிக்கா இடையே சமரசம் காண பிரித்தானிய பிரதமர் அழைப்பு

12 சித்திரை 2026 ஞாயிறு 14:32 | பார்வைகள் : 265


பாகிஸ்தானில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் உடன்பாடு இன்றி தோல்வியடைந்த நிலையில், இரு நாடுகளும் ஒரு வழியைக் கண்டறிய வேண்டும் என பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் 21 மணிநேரம் நீடித்த நீண்ட பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தோல்வியில் முடிந்ததை அடுத்து, ஓமான் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அல் சையதுடன் பிரதமர் ஸ்டார்மர் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை வழங்க ஈரான் மறுத்ததே பேச்சுவார்த்தை தோல்விக்கு முக்கிய காரணம் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.  தெரிவித்துள்ளார். இதனால் தற்போது அமுலில் உள்ள இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்தத்தின் எதிர்காலம் குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது.

டவுனிங் ஸ்ட்ரீட் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

தற்போதைய போர்நிறுத்தம் தொடர்வது அவசியம் எனவும், நிலைமையை மேலும் மோசமாக்கும் நடவடிக்கைகளில் அனைத்துத் தரப்பினரும் ஈடுபடக்கூடாது எனவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதன் அவசியம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனால் உலகளாவிய எரிசக்தி விலை கடுமையாக உயர்ந்துள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அடுத்த வாரம் லண்டனில் பல நாடுகளின் கூட்டமைப்பை உள்ளடக்கிய மற்றுமொரு பேச்சுவார்த்தையை பிரித்தானியா நடத்தவுள்ளது. கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதே இதன் முக்கிய நோக்கம்.

ஈரான் மீது சர்வதேச அளவில் ராஜதந்திர அழுத்தத்தை அதிகரிக்கவும், ஹோர்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான கப்பல்கள் மற்றும் மாலுமிகளை விடுவிக்க சர்வதேச கடல்சார் அமைப்பின் உதவியை நாடவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பொருளாதாரத் தடைகள் போன்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் அடுத்த வாரக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்திய "ஒரு நாகரிகமே அழிந்துவிடும்" போன்ற கடுமையான சொற்களை பிரித்தானிய சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் விமர்சித்துள்ளார். ஈரானியப் போர், கிரீன்லாந்து விவகாரம் மற்றும் சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் ஆகியவற்றால் பிரித்தானியா - அமெரிக்கா இடையிலான உறவில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களால் வளைகுடா நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரிட்டனின் இந்த இராஜதந்திர நகர்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

 

எழுத்துரு விளம்பரங்கள்