Paristamil Navigation Paristamil advert login

ஒரே ஒருவர் மட்டும்தான் கட்சி! கூட்டணியில் சேர்த்து கொள்கின்றனர்! சீமான்

ஒரே ஒருவர் மட்டும்தான் கட்சி! கூட்டணியில் சேர்த்து கொள்கின்றனர்! சீமான்

11 சித்திரை 2026 சனி 06:21 | பார்வைகள் : 174


ஒரே ஒருவர் மட்டும்தான் கட்சி என இருப்பவர்களை கூட கூட்டணியில் சேர்த்து கொள்கின்றனர், என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தார்.

துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் நா.த.க., வேட்பாளர்களை ஆதரித்து விளாத்திகுளம், கோவில்பட்டி, துாத்துக்குடி பகுதிகளில் பிரசாரம் செய்த சீமான் பேசியதாவது:

கூட்டணி அமைக்காமல், மக்களை மட்டுமே நம்பி தேர்தலில் நிற்கும் கட்சிதான் உண்மையிலேயே பெரிய கட்சி. 22 கட்சிகள் கூட்டு சேர்ந்து நிற்பது பெரிதல்ல. தனித்து நிற்பவனுக்குதான் வீரமும், துணிவும் தேவை. எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் எதிர்த்து நிற்பவன் வீரன்; எதையோ எதிர்பார்த்து நிற்பவன் கோழை. ஒரே ஒருவர் மட்டும்தான் கட்சி என இருப்பவர்களை கூட கூட்டணியில் சேர்த்து கொள்கின்றனர்.

திமுகவும் அதிமுகவும், மாறி மாறி இலவச வெற்று வாக்குறுதிகளை அளிக்கின்றனர். ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் மூன்றாவது பெரிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது நாதக ஆசை காட்டி ஓட்டை பறிக்க வேண்டும் என்றால், மற்ற கட்சிகளை போல என்னாலும் வாக்குறுதிகள் கொடுக்க முடியாதா? ஒவ்வொரு வீட்டிற்கும் ஹெலிகாப்டர், அதை நிறுத்த ஹெலிபேட், ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கிலோ தங்கம் கொடுப்பேன். புதுமண தம்பதியரை தேனிலவுக்கு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பேன். இதெல்லாம் கேட்க எவ்வளவு கேவலமாக இருக்கிறது?

எனக்கு கனவு, நோக்கம் இருக்கிறது. மதிப்பு மிகுந்த கல்வி, மருத்துவம், குடிநீர் இவற்றையெல்லாம் தான், இலவசமாக தருவேன். மற்ற தேவைகளை தரமாக, தட்டுப்பாடு இல்லாமல் உரிய கட்டணத்தில் நிறைவேற்றுவேன். மற்றவர்கள் வென்றால், அது வெறும் செய்தி. நா.த.க., வேட்பாளர் வென்றால், அது வரலாறு.

நான் மற்றவர்களை போல 'ரோடு ஷோ' நடத்தும் ஆள் இல்லை; கருத்தை கடத்தும் புரட்சியாளன். கோடிகளை கொட்டி அரசியல் செய்ய வரவில்லை. உயர்ந்த கொள்கையை கொண்டு அரசியல் செய்ய வந்தவன்.இவ்வாறு சீமான் பேசினார்.

எழுத்துரு விளம்பரங்கள்