Paristamil Navigation Paristamil advert login

வழக்கறிஞராக பேரறிவாளன் பதிவு: காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு

வழக்கறிஞராக பேரறிவாளன் பதிவு: காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு

30 சித்திரை 2026 வியாழன் 11:01 | பார்வைகள் : 177


முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் சமீபத்தில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். இதற்கு, காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் விபரம்:

காங்கிரஸ் எம்.பி., சுதா ராமகிருஷ்ணன்: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளியாக இருந்தவர் பேரறிவாளன். அவர் வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்த நாள் கருப்பு நாள்.

மரண தண்டனை குற்றவாளியான பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு இருந்தாலும், இது தவறான முன்னுதாரணம். அவர் வழக்கறிஞராக பதிவு செய்திருப்பதை ரத்து செய்ய வேண்டும் என, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மனு அனுப்பி இருக்கிறேன்.

தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு முன்னாள் தலைவரும், செய்தி தொடர்பாளருமான சந்திரசேகரன்: காங்கிரஸ் கட்சியை நேசிப்பவர்களுக்கும், ராஜிவை நேசிப்பவர்களுக்கும், இது வேதனையை தருகிறது. வெறுக்கத்தக்கதாக அமைந்திருக்கிறது.

கொடூரமாக கொலை செய்யும் குற்றவாளி, பெண்களை பாலியல் செய்த குற்றவாளிகளுக்கு ஜாமின் எடுக்க முன்வராமல், அவர்களுக்கு வாதாடாமல் வழக்கறிஞர்கள் புறக்கணிப்பது போல், கொலை குற்றவாளியாக கருதப்பட்ட பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை, பார் கவுன்சில் திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.