Paristamil Navigation Paristamil advert login

மகளிரை ஏமாற்றிய காங்கிரஸ், திமுக: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மகளிரை ஏமாற்றிய காங்கிரஸ், திமுக: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

29 சித்திரை 2026 புதன் 08:07 | பார்வைகள் : 208


வாரிசு அரசியல்வாதிகள் உள்ள கட்சிகள், நமது மகள்கள் லோக்சபாவுக்கு செல்வதை விரும்பவில்லை. திமுக, காங்கிரஸ், திரிணமுல் உள்ளிட்ட கட்சிகள்  மகளிரை மீண்டும் ஏமாற்றிவிட்டன என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

வாரணாசியில் நடந்த பெண்கள் மாநாட்டில் ரூ.350 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிந்த பணிகளை துவக்கி வைத்தும் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதற்கான இயக்கம், எந்த தடையும் இன்றி முன்னேறி செல்கிறது. வளர்ந்த இந்தியா என பேசும்போது அதில் வலிமையான தூண்களாக பெண்கள் சக்தி உள்ளது.

வாரணாசி தொகுதி எம்பி மற்றும் நாட்டின் பிரதமர் என்ற அடிப்படையில், லோக்சபா, சட்டசபைகளில் மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது உள்ளிட்ட தேச நலன் சார்ந்த லட்சியங்களை நிறைவேற்ற  உங்களின் ஆசி எனக்கு தேவைப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன், பார்லிமென்டில் இதற்கான முயற்சி தோல்வியடைந்தது. இதற்கு காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் காரணம். நமது சகோதரிகள் சுயசார்பு உடையவர்களாக  பாஜ மற்றும் தேஜ கூட்டணி  பணியாற்றி வருகிறது. அதிகாரம் அளித்து வருவதுடன், வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் பணியில் அவர்களுக்கு தலைமை பங்கையும் அளித்து வருகிறது.

சமாஜ்வாதி கட்சி மாநிலத்தில் ஆட்சியில் இருந்த  போது,  பெண்கள் வெளியில் செல்ல தயங்கினர்.  ஆனால், பாஜ ஆட்சிக்கு வந்ததும்,  நமது மகள்களுக்கு தீங்கு விளைவித்தால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை தெரிந்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் மகளிர் இட ஒதுக்கீட்டுக்கு 40 ஆண்டுகளாக தடையை ஏற்படுத்தின. வாரிசு அரசியல்வாதிகள் உள்ள கட்சிகள்,  நமது மகள்கள் சட்டசபைக்கும், லோக்சபாவிற்கும் செல்வதை விரும்பவில்லை. காங்கிரஸ், திரிணமுல், திமுக உள்ளிட்ட கட்சிகள் மகளிரை மீண்டும் ஏமாற்றி உள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்