Paristamil Navigation Paristamil advert login

விவசாயிகள் வருமானம் சரிவு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

விவசாயிகள் வருமானம் சரிவு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

28 சித்திரை 2026 செவ்வாய் 07:37 | பார்வைகள் : 378


விவசாயிகளின் வருமான நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. ஏப்ரல் மாதம் 28ம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின் படி, நாட்டில் 43% விவசாயிகள் தங்களது தொழிலில் இருந்து குறைந்தபட்ச சம்பளமான (SMIC) அளவையும் பெற முடியாமல், மாதத்திற்கு 1,450 யூரோக்களுக்கு குறைவாகவே சம்பாதித்து வருகின்றனர். Max Havelaar France அமைப்பின் ஆய்வாகிய இது, மே மாதத்தில் தேசிய சபையில் அவசர விவசாய சட்ட மசோதா விவாதிக்கப்படவுள்ள நிலையில் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வில் கடந்த பத்து ஆண்டுகளில் அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்ய வருடத்திற்கு சராசரியாக 3.3 பில்லியன் யூரோக்கள் பற்றாக்குறை இருந்ததாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் அது 4.7 பில்லியன் யூரோக்களாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 54% விவசாயிகள் நாட்டின் சராசரி ஊழியர்களை விட குறைவான வருமானம் பெறுகின்றனர் என்பதும் வெளிப்படுகிறது. உணவுப் பொருட்கள் வாங்கும் போது, அவற்றை உற்பத்தி செய்தவர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை எனவும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

மேலும், விவசாய துறைகளுக்கு இடையில் வருமான வேறுபாடுகள் அதிகமாக உள்ளன. தானியங்கள் மற்றும் எண்ணெய் விதைகள் உற்பத்தியில் ஈடுபடும் 53% விவசாயிகள் குறைந்தபட்ச சம்பளத்திற்குக் கீழ் வாழ்கின்றனர்; மாட்டிறைச்சி மற்றும் சிறு கால்நடைத் துறைகளிலும் இதே நிலை தொடர்கிறது. அதேவேளை, திராட்சைச் சாறு உற்பத்தி துறை சற்றே நிலைத்தன்மையுடன் காணப்படுகிறது.

 தற்போதைய சட்டங்கள் போதுமானதாக இல்லையெனினும், அரசு முன்வைத்துள்ள அவசர சட்டம் மூலம் விவசாயிகளுக்கு நியாயமான விலை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன; இருப்பினும் இது கட்டாயமாக செயல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்