Paristamil Navigation Paristamil advert login

தாயகம் திரும்புங்கள்: அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு அழைப்பு

தாயகம் திரும்புங்கள்: அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஸ்ரீதர்  வேம்பு  அழைப்பு

28 சித்திரை 2026 செவ்வாய் 06:14 | பார்வைகள் : 1549


அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் திறமை  தாய்நாட்டிற்கு  தேவைப்படுவதால் அவர்கள்  உடனடியாக நாடு திரும்ப  வேண்டும்  என ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர்  வேம்பு கூறியுள்ளார்.

இது  தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில்  கூறியுள்ளதாவது:

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்தது போலவே நீங்களும் பணமின்றி ,ஆனால் பாரத நாட்டின் தரமான கல்வி மற்றும் கலாசார பாரம்பரியத்துடன் அமெரிக்காவுக்கு வந்தீர்கள். நீங்கள் மகத்தான வெற்றியை அடைந்தீர்கள்.  அமெரிக்கா நமக்கு நல்லதை செய்தது. அதற்காக  நாம் நன்றியுடன் இருக்க வேண்டும். நன்றியுணர்வே   நமது பாரதியத்தின் வழி.

ஆனாலும்,  அமெரிக்கர்களில் கணிசமான   பேர், இந்தியர்கள் தங்கள் வேலையை பறித்துக் கொள்வதாக கருதுகின்றனர். அமெரிக்காவில் நமது வெற்றி நியாயமற்ற முறையில்  பெறப்பட்டது என்று அவர்கள் கருதுகின்றனர்.

இதனை அடுத்த தேர்தல் சரி செய்து விடும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால்,  உங்களுக்கான வாய்ப்பு என்பது  பாரதத்தின் கலாசாரத்தை வெறுப்பவர்களுக்கும், கலாசாரத்தை வெறுப்பவர்களுக்கும் இடையே தான் இருக்கும். தீவிர வலதுசாரி  மற்றும் அதிதீவிர இடதுசாரி இடையிலான மோதலாக இருக்கும். அதில் நீங்கள் வெறும் பார்வையாளர்கள் தான்.

உலகளவில் இந்தியர்களுக்கு கிடைத்திருக்கும் மதிப்பானது, இந்திய நாட்டின் அதிர்ஷ்டத்தால் தான் கிடைக்கிறது. இது இன்றும், எதிர்காலத்திலும் தொடரக்கூடிய உண்மையான விஷயம்.

இந்தியா  ஏழையாகவே  இருந்தால், முற்போக்கு இடதுசாரிகள் நம்மீது  பரிதாபப்பட்டு அறநெறி போதனைகளை வழங்குவர். ஆனால், தீவிர வலதுசாரிகள், இந்தியாவை நரகக்குழு என்று இகழ்ந்து  வேறு வகையான போதனைகளை வழங்குவர்.  இவ்விரண்டையும் நமக்கு வழங்கப்பட்ட மரியாதை என நாம் குழப்பிக் கொள்ளக்கூடாது.

இன்றைய உலகில் மரியாதை, செழிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை ஒரு நாட்டின் தொழில்நுட்பத் திறமை என்ற அடிப்படையில் இருந்துதான் வருகிறது. அந்தத் திறமையை  அடைவதற்கு தேவையான அறிவுத்திறனை இந்தியா உருவாக்குகிறது.

ஆனால்,  அந்தத் திறமையின் பெரும்பகுதியை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துவிடுகிறோம் என்பது வருந்தத்தக்க விஷயம். இந்தியாவில் அந்த திறமையை  நாம் வளர்க்கும்போது,  நமது நாட்டின் மக்கள் பலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும். கடினமாக இருந்தாலும் தயவு செய்து தாயகம் திரும்புங்கள்.  உங்களது திறமை பாரத மாதாவிற்கு தேவை.

நமது  பரந்த இளைஞர் சமுதாயத்தை  செழிப்பின் பாதையில் வழிநடத்த  பல ஆண்டுகளாக நீங்கள் பெற்ற  தொழில்நுட்பத் தலைமைத்துவம் அவர்களுக்கு தேவை.  ஒரு சமுதாயப்பணி என்ற ஆர்வத்துடன் இதை செய்வோம். இவ்வாறு அந்த கடிதத்தில்  ஸ்ரீதர்  வேம்பு கூறியுள்ளார்.