Paristamil Navigation Paristamil advert login

பெண்களைத் துப்பாக்கி காட்டி அச்சுறுத்தியதாக அர்ச்சுனா மீது குற்றச்சாட்டு

பெண்களைத் துப்பாக்கி காட்டி அச்சுறுத்தியதாக அர்ச்சுனா மீது குற்றச்சாட்டு

26 சித்திரை 2026 ஞாயிறு 15:18 | பார்வைகள் : 346


யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பெண்களைத் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

சம்பவம் இடம்பெற்ற காணியின் உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. குறித்த காணி தனக்குச் சொந்தமானது என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரி வரும் நிலையில், மற்றொரு தரப்பினரும் அதற்கு உரிமை கோரி வருகின்றனர்.

நேற்றையதினம் குறித்த காணியைச் சுத்தம் செய்யும் பணியில் பாராளுமன்ற உறுப்பினர் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த இரு பெண்கள் காணியின் ஒரு பகுதி தமக்குரியது எனக் கூறி அவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, எதிரே நின்ற பெண்கள் எவ்வித ஆயுதங்களுமின்றி கைகளை வீசிப் பேசிக்கொண்டிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் திடீரெனத் தனது கைத்துப்பாக்கியை எடுத்து அவர்களை மிரட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பெண்கள் மீதான இத்தகைய அச்சுறுத்தல் சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்குத் துப்பாக்கி வழங்கப்பட்டமையானது பொதுமக்களுக்கு ஆபத்தானது எனப் பல்வேறு தரப்பினரும் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தனர்.

எனினும், அந்தத் துப்பாக்கி இதுவரை மீளப் பெறப்படவில்லை. இவ்வாறான நிலை தொடருமானால் பாரிய அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் எனப் பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.