Paristamil Navigation Paristamil advert login

கருணாநிதிக்கு அளித்த வாக்குறுதி; ஸ்டாலினுடன் இருப்பதற்கு காரணம் சொல்லும் வைகோ

கருணாநிதிக்கு அளித்த வாக்குறுதி; ஸ்டாலினுடன் இருப்பதற்கு காரணம் சொல்லும் வைகோ

18 பங்குனி 2026 புதன் 05:14 | பார்வைகள் : 507


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி காலத்தில், அவருக்கு அளித்த வாக்குறுதிக்காக ஸ்டாலினுடன் இருப்பதாக, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, ம.தி.மு.க., சார்பாக தேர்தல் அறிக்கையை, சென்னையில் வைகோ வெளியிட்டார். பின், அவர் அளித்த பேட்டி: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி காலத்தில், அவரை சந்தித்தேன். அப்போது, அவரிடம், 'ஒரு காலத்தில் உங்களுக்கு பக்க பலமாக இருந்ததுபோல, என் வாழ்நாள் முழுதும், உங்கள் மகன் ஸ்டாலினுக்கு பக்க பலமாக இருப்பேன்' என்ற வாக்குறுதியை தந்தேன்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நான் செயல்படுகிறேன். தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்பார். தேர்தலுக்கு பின், கூட்டணி அமைச்சரவைக்கு இடமில்லை. தி.மு.க., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

வைகோ வெளியிட்ட ம.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மது விலக்கு எங்கள் இலக்கு. இளைஞர்கள் வாழ்வை சீரழிப்பதாக, மதுப்பழக்கம் உள்ளது. 'கொகைன்' போன்ற போதை பொருட்களால் மாணவர்கள் வாழ்வு சீரழிகிறது. போதையால், பெண்களிடம், பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடுவதும் அன்றாட நிகழ்வாகிறது.

இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை, வாழ்நாள் முழுதும் சிறையில் அடைக்கும் வகையில், சிறப்புச் சட்டம் இயற்ற குரல் கொடுப்போம். 'லாக்கப்' மரணங்கள் தடுக்க வேண்டும். வெளிப்படைத்தன்மை, சொத்து பாதுகாப்பு, பக்தர்கள் நலன் ஆகியவற்றில், ஹிந்து சமய அறநிலையத் துறை கவனம் செலுத்தினால், கோவில்கள் எல்லாம் ஆன்மிகத்துடன், சமூக முன்னேற்ற மையங்களாகவும் வளர முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.