Paristamil Navigation Paristamil advert login

சமையல் காஸ் சிலிண்டர் குறித்து பீதியடைய வேண்டாம்: மத்திய அரசு விளக்கம்

சமையல் காஸ் சிலிண்டர் குறித்து பீதியடைய வேண்டாம்: மத்திய அரசு விளக்கம்

14 பங்குனி 2026 சனி 12:24 | பார்வைகள் : 174


சமையல் காஸ் சிலிண்டர் தொடர்பாக பொதுமக்கள் பதற்றம் அ டைய வேண்டாம். அதன் உள்நாட்டு உற்பத்தி, 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது, என, மத்திய பெட்ரோலியத் துறை இணை செயலர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார்.

மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுப்பதால், மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.

அமெரிக்காவின் தாக்குதலால் கடுப்பான ஈரான், உலகின், 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால், நம் நாடு உட்பட உலகளவில் எரிவாயு, பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

மாற்று வழிகளில் கச்சா எண்ணெய், எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், சமையல் காஸ் சிலிண்டர், பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளால் நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், தலைநகர் டில்லியில் நேற்று, மத்திய பெட்ரோலியத் துறை இணை செயலர் சுஜாதா சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சமையல் காஸ் சிலிண்டர் தொடர்பாக பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம். சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளையும் நம்ப வேண்டாம். தேவை இருந்தால் மட்டுமே, ஆன்லைன் மூலம் காஸ் சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும்.

கடந்த 5ம் தேதி உடன் ஒப்பிடுகையில், நம் நாட்டின் சுத்திகரிப்பு நிலையங்களில், சமையல் காஸ் உற்பத்தி தற்போது, 30 சதவீதம் அதிகரித்து உள்ளது. வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தடையின்றி காஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நாட்டின், 25,000 வினியோகஸ்தர்களில் ஒருவரிடம் கூட இருப்பு இல்லை என்ற நிலை ஏற்படவில்லை. எனவே, வதந்திகளை நம்பி தேவையில்லாமல் காஸ் சிலிண்டர்களை வாங்கி சேமிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும். பிப்ரவரியில், 71 சதவீதமாக இருந்த ஆன்லைன் முன்பதிவு, நடப்பு மாதத்தில், 83 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தினசரி முன்பதிவு, 55 லட்சத்திலிருந்து, 75 லட்சமாக அதிகரித்த போதும், வினியோகத்தில் எந்த தடையும் ஏற்படவில்லை. வணிக ரீதியிலான காஸ் சிலிண்டர்களை வினியோகிக்கும் பொறுப்பு, அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

நம் நாடு தற்போது, 25.8 கோடி மெட்ரிக் டன் சுத்திகரிப்பு திறனை கொண்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற்றுள்ளதால், அவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும், 100 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான திறனுடன் இயங்கி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.