Paristamil Navigation Paristamil advert login

8 எரிவாயு கப்பல்களை கொண்டு வர ஈரானுடன் மத்திய அரசு பேச்சு

8 எரிவாயு கப்பல்களை கொண்டு வர ஈரானுடன் மத்திய அரசு பேச்சு

14 பங்குனி 2026 சனி 05:55 | பார்வைகள் : 215


இந்தியாவுக்கு வர வேண்டிய எட்டு எரிவாயு டேங்கர் கப்பல்கள், போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் காத்திருக்கும் நிலையில், அவற்றை பத்திரமாக அனுப்ப ஈரான் வெளியுறவு அமைச்சருடன் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு நடத்தினார்.

மேற்கு ஆசிய நாடான ஈரானின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி உள்ளது. இப்பகுதி வழியாக, உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் வினியோகம் நடக்கிறது. தற்போது இந்த கடல் பாதையை கடக்கும் கப்பல்களை ஈரான் தாக்குவதால் போக்குவரத்து முடங்கிஉள்ளது.

நம் நாட்டில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவில், 60 முதல் 67 சதவீதம் வரை இறக்குமதியை நம்பியே உள்ளது. அதில் பெரும்பகுதி சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. எனவே, இந்த வழித்தடத்தில் ஏற்படும் தடைகள் நாட்டின் எரிவாயு வினியோகத்தை பாதிக்கும்.

இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே காத்திருக்கும் இந்தியாவுக்கான எட்டு எரிவாயு டேங்கர் கப்பல்களை இந்தியாவுக்கு அனுப்புவது குறித்து, இந்தியா - ஈரான் இடையே உயர்மட்ட பேச்சு நடந்து வருகிறது.

அதில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியுடன் நேற்று நான்காவது முறையாக பேசினார். அப்போது சமையல் எரிவாயு கப்பல்களை அனுமதிக்க கோரினார். விரைவில் அவை, ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் அமைச்சர் அராக்சி கூறியதாவது:

இஸ்ரேல், அமெரிக்கா போர் குற்றங்களில் ஈடுபடுகின்றன. அந்நாடுகளிடம் இருந்து தற்காத்து கொள்ள சட்டப்பூர்வ வழிகளில் செயல்படுகிறோம்.

பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு, நெருக்கடியான சந்தர்ப்பங்களில் பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.