இடைப்பாடி த.வெ.க., வேட்பாளர் எங்கே?
9 சித்திரை 2026 வியாழன் 06:04 | பார்வைகள் : 332
சேலம் மாவட்டம், வலசையூர், மணிகண்டன் நகர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகன் மகன் அருண்குமார், 43. இவர், இடைப்பாடி தொகுதியில், த.வெ.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக, அவரது மனைவி நித்யா மனு செய்தார். நேற்று முன்தினம், மனுபரிசீலனை நடந்தபோது, வேட்பாளர் அருண்குமாரும், மாற்று வேட்பாளரான அவரது மனைவியும் அங்கு இல்லை.
அருண்குமார் வேட்புமனுவில், 10 பேர் முன்மொழிவுக்கு, எட்டு பேரும்; மனைவி வேட்புமனுவில் ஏழு பேரின் முன்மொழிவு கையெழுத்தும் இருந்ததால், இரண்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டன. அவர் அ.தி.மு.க.,விடம் விலை போய்விட்டதாக, த.வெ.க.,வினர் குற்றஞ்சாட்டினர்.
இடைப்பாடி தொகுதியில், அ.தி.மு.க., - தி.மு.க., - நா.த.க., வேட்பாளர்கள் இடையே மட்டும் போட்டி இருக்கும். த.வெ.க., வேட்பாளர் போட்டியிடாத சூழல் உருவாகியுள்ளதால், அக்கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். வேட்பாளர் அருண்குமார், தன் குடும்பத்தினருடன் தலைமறைவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் த.வெ.க., மேற்கு மாவட்ட செயலர் செல்வம் கூறியதாவது:
அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலராக இருந்த அருண்குமார், தி.மு.க.,வில் இணைந்தார். சமீபத்தில் மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்தார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வாயிலாக த.வெ.க.,வுக்கு வந்த அவரை, இடைப்பாடி தொகுதி வேட்பாளராக கட்சி தலைமை அறிவித்தது.
வேட்பு மனு நாளில், கட்சியினருடன் செல்லாமல், வேறு சில நபர்களுடன் சென்று மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்கு முன், வேட்பாளர் அருண்குமாருக்கும், மாற்று வேட்பாளரான அவரது மனைவி நித்யாவுக்கும், தலா, 10 பேர் முன்மொழிவு கையெழுத்து போட்டு படிவம் கொடுத்து அனுப்பினோம். ஆனால், 10 பேருக்கும் குறைவாக முன்மொழிவு கையெழுத்திட்ட வேறு படிவத்தை, அவர் திட்டமிட்டு வழங்கியுள்ளார். மனு அளித்த பின்பு, கட்சியினருடன் வராமல், 'ரெஸ்ட் ரூம்' செல்வதாக கூறி வேறு வழியில் சென்றபோதே சந்தேகம் ஏற்பட்டது.
வேட்புமனு பரிசீலனை நடந்தபோது, அலுவலகத்திற்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு, உள்ளே செல்லாமல் உடனடியாக வெளியேறியுள்ளார். வேட்பாளரை காணவில்லை என, எஸ்.பி., அலுவலகத்திற்கு ஆன்லைனில் புகார் அளித்தோம்.
அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, மனைவி மற்றும் குடும்பத்தினருடன் அவர் தலைமறைவானது தெரியவந்துள்ளது. யாரோ ஒருவரது பிடியில் சிக்கி, அவர் தலைமறைவாக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan