Paristamil Navigation Paristamil advert login

ஆப்கானிஸ்தானில் வெள்ள அனர்த்தம் - 50 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் வெள்ள அனர்த்தம் - 50 பேர் உயிரிழப்பு

4 சித்திரை 2026 சனி 08:31 | பார்வைகள் : 200


ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பெருக்கால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஐ கடந்துள்ளது. கடந்த எட்டு நாட்களில் குறைந்தது 51 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 89 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளப்பெருக்கு நாட்டின் பல பகுதிகளை தாக்கியுள்ள நிலையில், குறைந்தது 18 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் தலைநகர் காபூல், கந்தஹார் மற்றும் ஹெராத் உள்ளிட்ட முக்கிய பகுதிகளும் அடங்குகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மூவர் உயிரிழந்ததுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பேரழிவால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். நூற்றுக்கணக்கான வீடுகள் முற்றிலும் அழிந்ததோ அல்லது சேதமடைந்ததோடு, சுமார் 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

கடந்த ஒரு நாளில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  மார்ச் 26 முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் 676 வீடுகள் அழிந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் வீதிகள் சேதமடைந்துள்ளன. மேலும், சுமார் 4,000 ஏக்கர் நிலப்பரப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில், நாடு முழுவதும் 8,600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வசந்த காலத்தில் கனமழையும் பனிப்பாறைகள் உருகுவதும் காரணமாக, ஆப்கானிஸ்தான் அடிக்கடி வெள்ள அபாயத்திற்கு உள்ளாகும் நாடாகும். இதனால் பலவீனமான கட்டமைப்புகள் மேலும் அழுத்தத்திற்குள்ளாகின்றன.

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு கிராமப்புற மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.