Paristamil Navigation Paristamil advert login

எரிபொருள் விலை உயர்வால் பாதிப்பு - சிறு நிறுவனங்களுக்கு கடன் உதவி திட்டம் அறிவிப்பு!!

எரிபொருள் விலை உயர்வால் பாதிப்பு - சிறு நிறுவனங்களுக்கு  கடன் உதவி திட்டம் அறிவிப்பு!!

4 சித்திரை 2026 சனி 07:45 | பார்வைகள் : 347


மத்திய கிழக்கு போரின் தாக்கத்தால் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், பொருளாதார அமைச்சகம் “Prêt Flash Carburant” எனும் புதிய கடன் உதவி தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.

 Bpifrance உடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த திட்டம், எரிபொருள் செலவால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிதிநிலையை ஆதரிப்பதே நோக்கமாகும்.

இந்த திட்டத்தின் கீழ், 5,000 முதல் 50,000 யூரோக்கள் வரை 3.80% வட்டியில், எந்த உத்தரவாதமும் இன்றி கடன் வழங்கப்படும்.

போக்குவரத்து, வேளாண்மை, மீன்பிடி போன்ற துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் இதற்கு தகுதி பெறுகின்றன. மேலும், எரிபொருள் செலவு நிறுவன வருமானத்தின் குறைந்தது 5% ஆக இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கடன்கள் முழுமையாக மின்னணு சேவை முறையில் வழங்கப்பட்டு, 7 நாட்களுக்குள் தொகை கிடைக்கும் என்றும், 36 மாத கால அவகாசத்துடன் முதல் 12 மாதங்களுக்கு மூலதன திருப்பிச் செலுத்துதலில் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவித் திட்டங்கள் குறித்து பிரதமர் Sébastien Lecornu முன்பே உறுதியளித்திருந்தார். அதேவேளை, பொருளாதார அமைச்சர் Roland Lescure ஐரோப்பிய கமிஷனிடம் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் லாப விகிதங்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரியுள்ளார். இதற்கிடையில், எரிபொருள் விலை உயர்வு காரணமாக மக்கள் மற்றும் தொழில் துறைகள் மீது அழுத்தம் அதிகரித்துள்ளதால், அரசு மேலும்  உதவிகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.