Paristamil Navigation Paristamil advert login

ஓட்டுக்கு பணம் வாங்குவது ஜனநாயக துரோகம்: சீமான்

ஓட்டுக்கு பணம் வாங்குவது ஜனநாயக துரோகம்: சீமான்

3 சித்திரை 2026 வெள்ளி 05:24 | பார்வைகள் : 159


பணத்தை பெற்று கொண்டு ஓட்டு போடுவது, ஜனநாயகத்தை படுகொலை செய்யும் தேச துரோகம், என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

ஊட்டி, குன்னூர், கூடலூரில் போட்டியிடும் நா.த.க., வேட்பாளர்களை ஆதரித்து, குன்னூரில் நடந்த பிரசாரத்தில், சீமான் பேசியதாவது:

நம் மாநிலத்தில், இலவசங்களை வாரி இறைத்து, ஓட்டுக்கு 2,000, 3,000 ரூபாய் என பணத்தை கொடுத்து, மக்களின் ஓட்டுகளை பறிக்கும் கேடுகெட்ட பணநாயகம் ஒருபுறம் நிற்கிறது. மறுபுறம், உழைக்கும் மக்களுக்கு தற்சார்பு பொருளாதாரத்தை வழங்கி, தலைநிமிர்ந்து வாழ வைக்க துடிக்கும் பிள்ளைகளாக நாங்கள் நிற்கிறோம்.

பணத்திற்காக உங்கள் ஓட்டை விற்றால், அது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் தேச துரோகம். இலவசங்களை நம்பி ஏமாறாதீர்கள். ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள், மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை. கோடிகளை சம்பாதிக்கவே வருகின்றனர். இலவசங்களை ஒழித்து அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கி நாட்டை உயர்த்துவதே எங்கள் இலக்கு. எங்கள் ஆட்சி அமைந்தால், பின்லாந்து, சிங்கப்பூர் நாடுகளுக்கு இணையான, உலகத்தரம் வாய்ந்த இலவச கல்வி வழங்குவோம்.

சரிசம மருத்துவம், தேயிலை, மலை காய்கறிகளுக்கு விவசாயிகளே விலையை நிர்ணயிக்கும் முறையை கொண்டு வருவோம். படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருக்கும் அவரவர் ஊர்களில் அரசு வேலைகள் உருவாக்கப்படும். மொழியையும், மலை, காடு, ஆறு உள்ளிட்ட இயற்கையையும் பாதுகாப்பதே எங்கள் தலையாய கொள்கை. இவ்வாறு சீமான் பேசினார்.

பிரசார கூட்டத்துக்கு பின் சீமான் அளித்த பேட்டி: நம் நாட்டை அடமானம் வைத்து 10 லட்சம் கோடி, 20 லட்சம் கோடி என கடன் வாங்குகின்றனர். பட்ஜெட்டே 3 லட்சம் கோடி ரூபாய் தான். இரண்டு லட்சம் கோடி ரூபாய் வட்டிக்கு போய்விட்டால், ஒரு லட்சம் கோடியை வைத்து என்ன செய்ய முடியும். 'இலவசம் இலவசம்' என சொல்லி, மக்களை கடனாளி ஆக்கிவிட்டனர்.பா.ஜ.,வை பாசிசம் என விமர்சித்தவர்கள், தற்போது தனது திரைப்பட வெளியீட்டுக்கு சிக்கல் வரும் என பயந்து, அமைதி காக்கின்றனர்.

41 பேர் இறந்த இடத்தில் சென்று பார்க்காத விஜய்க்கு, பாதுகாப்பு வேண்டும் என கேட்கிறார்கள். ஒரு தலைவனுக்கே பாதுகாப்பு வேண்டுமென்றால், மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? இவ்வாறு அவர் கூறினார்.