Paristamil Navigation Paristamil advert login

பாக்தாத்தில் ஈரான் ஆதரவுக் குழுக்கள் தாக்குதல் நடத்தத் திட்டம் - அமெரிக்க தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு

பாக்தாத்தில் ஈரான் ஆதரவுக் குழுக்கள் தாக்குதல் நடத்தத் திட்டம் - அமெரிக்க தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு

2 சித்திரை 2026 வியாழன் 14:24 | பார்வைகள் : 189


ஈரான் ஆதரவுக் குழுக்கள் ஈராக்கின் பாக்தாத் நகரின் மத்திய பகுதியில் அடுத்த 24 - 48 மணிநேரத்தில் தாக்குதல் நடத்தக்கூடும் என  ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வரும் நிலையில் அங்குள்ள அமெரிக்கர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு தூதரகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்கத் தூதரகம் அதன் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை (2) விடுத்துள்ளது.

ஈரான் ஆதரவுப்படைகள் அமெரிக்கர்களையும் வணிக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தூதரக தளங்கள், எரிசக்தி உள்கட்டமைப்புகள், ஹோட்டல்கள், விமான நிலையங்கள் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடைய இடங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தக்கூடும்.

அதேவேளை ஈராக் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களும் இலக்குவைத்து தாக்க திட்டமிட்டிருக்கலாம்.

மேலும், அந்த பயங்கரவாதக் குழுக்கள் அமெரிக்கர்களை கடத்தவும் முயற்சிக்கலாம் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஈராக்கில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பத்திரிகையாளரான ஷெல்லி கிட்டில்சன் கடந்த செவ்வாய்க்கிழமை ஈராக் தலைநகரில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க அரசாங்கம் அவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை  தற்போது தீவிரமாக எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.