வடகொரியாவுக்கான விமான சேவையை 6 ஆண்டுகள் கழித்து ஆரம்பித்திருக்கிறது சீனா!
31 பங்குனி 2026 செவ்வாய் 13:49 | பார்வைகள் : 231
சீனா - வடகொரியா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான விமான போக்குவரத்து சேவை கடந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திங்கட்கிழமை 30.03.2026 மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இயங்கும் தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் சீனா, அதன் விமானப் போக்குவரத்தினை, தலைநகர் பீஜிங்கில் இருந்து வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங் வரை தொடங்கியிருக்கிறது.
அதன்படி, பீஜிங்கிலிருந்து புறப்பட்ட ஏர் சீனாவுக்கு சொந்தமான பயணிகள் விமானமான CA121 விமானம் இன்று காலை பியாங்யாங்குக்கு சென்றடைந்தது.
இதன்போது வடகொரியாவுக்கான சீனத் தூதுவர் வாங் யஜூன் (Wang Yajun), மற்ற இராஜதந்திரிகளுடன் இணைந்து பியாங்யாங்கில் உள்ள சுனான் சர்வதேச விமான நிலையத்தை குறித்த விமானத்தின் ஊடாக அடைந்த பயணிகளை வரவேற்றார்.
2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக வடகொரியா அதன் எல்லைகளை மூடியதால் அந்நாட்டுக்கான சர்வதேச விமான போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டிருந்தது.
அதன் பின்னர், ஆறு ஆண்டுகள் கழித்து இன்று இரு நாடுகளுக்கும் இடையேயான வான்வழிப் போக்குவரத்துக்காக, சீனா அதன் விமானங்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தியிருக்கிறது.
பீஜிங் - பியாங்யாங் இடையிலான ரயில் சேவைகள் இம்மாதம் முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்ட நிலையில், விமானங்களும் இயக்கப்பட்டுவிட்டன.
அத்துடன் வடகொரியா ரஷ்யாவுக்கான நேரடி விமான மற்றும் ரயில் சேவைகளை கடந்த ஆண்டு தொடங்கியிருந்தது.
மேலும், வடகொரியாவின் விமான நிறுவனமான ஏர் கோர்யோ 2023இல் பீஜிங் - பியாங்யாங் இடையிலான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan