Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க. கூட்டணியில் இணைந்த உடனேயே தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் ஏன்..?

தி.மு.க. கூட்டணியில் இணைந்த உடனேயே தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் ஏன்..?

26 பங்குனி 2026 வியாழன் 12:21 | பார்வைகள் : 251


கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 13 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்த தி.மு.க., இந்த முறை 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளது. முதல் முறையாக தே.மு.தி.க.வும் அந்தக் கூட்டணியில் இணைந்துள்ளது. தே.மு.தி.க.வின் வருகை தி.மு.க.வுக்கு நல் வருகையாக தெரிந்தாலும், கூட்டணி கட்சிகளுக்கு அவ்வாறு தெரியவில்லை.

தி.மு.க. கூட்டணியில் பல ஆண்டுகளாக இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெற வேண்டும் என்று திட்டமிட்டன. தங்களது விருப்பத்தையும் வெளிப்படையாக தெரிவித்தன.

ஆனால், கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க.வோ, கூட்டணிக்கு புதிதாக வந்துள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டியிருப்பதை சுட்டிக்காட்டி, கடந்த முறையைவிட ஒரு தொகுதியை குறைத்து தருவதாக அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இதை, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஏற்றுக்கொண்டன.

ஆனால், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் விடாப்பிடியாக இருந்து கூடுதல் தொகுதிகளை பெற்றுக்கொண்டன. கடைசியில், தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஏற்கனவே, ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், இவ்வளவு அதிக தொகுதிகளை ஒதுக்கியது, தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையேயே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த அதிருப்தி ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொருபுறம் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 0.43 சதவீத வாக்குகளையே பெற்ற தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது ஏன் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

தமிழக வடமாவட்டங்களில் வன்னியர்களின் செல்வாக்கு அதிகம். தற்போது, பா.ம.க. டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி தரப்பு என இரண்டாக உடைந்துவிட்டதால், அக்கட்சிக்கான வன்னியர் வாக்கு சிதறும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த மற்றொரு வன்னியர் கட்சியான தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் வெளியேறியது, தி.மு.க.வுக்கு வடமாவட்டங்களில் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஆனால், கடந்த காலங்களில் தே.மு.தி.க.வுக்கு செல்வாக்கு இருந்துள்ளது. 2011 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க., 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், பெரும்பாலான தொகுதிகள் வன்னியர்கள் நிறைந்த வடமாவட்டங்கள் ஆகும். எனவே, அந்த ஓட்டுகள் இப்போதும் தே.மு.தி.க.வுக்கு அப்படியே கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், விஜய்காந்தின் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், அனுதாப ஓட்டுக்களை  கொண்டுவரும் என்று தி.மு.க. தலைமை நம்புகிறது.

அதேபோல், விஜயகாந்த் மனைவி பிரேமலதா நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அச்சமுதாய வாக்குகள் கிடைக்கும் என்றும் தி.மு.க. தலைமை நினைக்கிறது. இப்படி, ஒரே கட்சி மூலம் 2 சமுதாய வாக்குகளை பெற முடியும் என்று தி.மு.க. தலைமை நினைத்ததாலேயே தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகளை அள்ளிக்கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், எங்களை விட வாக்கு சதவீதத்தில் குறைவாக உள்ள தே.மு.தி.க.வுக்கு இவ்வளவு தொகுதிகளா என்றும் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மனக்குமுறலில் இருப்பதாக சொல்லப்படுகிறது.