Paristamil Navigation Paristamil advert login

மத்திய கிழக்கு போர் - உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும்

மத்திய கிழக்கு போர் - உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும்

19 பங்குனி 2026 வியாழன் 11:26 | பார்வைகள் : 475


மத்திய கிழக்கில் நடைபெறும் போரின் காரணமாக உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி விலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு ஜெலென்ஸ்கி வழங்கிய நேர்காணலில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரானுடனான இஸ்ரேல்–அமெரிக்க போர் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறார் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

அது உக்ரைனை பலவீனப்படுத்துவதோடு, அமெரிக்காவின் ஆதரவு மற்றும் வளங்களையும் வேறு திசைக்கு திருப்பும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“புடினுக்கு, ஈரானில் நீண்டகால போர் ஒரு நன்மை. இது எரிசக்தி விலைகளை பாதிப்பதோடு, அமெரிக்காவின் ஆயுத கையிருப்பையும், வான்வழி பாதுகாப்பு உற்பத்தியையும் குறைக்கிறது. இதனால் நமக்கும் (உக்ரைனுக்கும்) வளங்களின் பற்றாக்குறை ஏற்படுகிறது,” என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

அமெரிக்கா மாதத்திற்கு சுமார் 60 முதல் 65 ஏவுகணைகள் வரை உற்பத்தி செய்கிறது என்றும், ஈரானில் போர் தொடங்கிய முதல் நாளிலேயே 803 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பேட்ரியட் (Patriot) தடுப்பு ஏவுகணைகள் குறைவடைந்துள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இது உக்ரைனுக்கு பெரிய சவாலாக இருக்கும் என்றும், மத்திய கிழக்கில் உள்ள கையிருப்புகள் எப்போது முழுமையாக காலியாகும்? என்பது தற்போது முக்கியமான கேள்வி எனவும் அவர் கூறியுள்ளார்.