Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவை மோடி விற்றுவிட்டதாக ராகுல் காந்தி விமர்சனம்: நிர்மலா சீதாராமன் பதிலடி

இந்தியாவை மோடி விற்றுவிட்டதாக ராகுல் காந்தி விமர்சனம்: நிர்மலா சீதாராமன் பதிலடி

12 மாசி 2026 வியாழன் 13:23 | பார்வைகள் : 167


மக்களவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பதிலளித்தார். அப்போது, பிரதமர் மோடி இந்தியாவை விற்றுவிட்டதாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுக்கு அவர் பதிலடி கொடுத்தார். பட்ஜெட் விவாதத்துக்கு அளித்த பதிலில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

காங்கிரஸ் ஆட்சியின்போது எகிப்தில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பியவர்கள்தான் இன்று எங்களுக்கு பேச்சுவார்த்தை குறித்து பரிந்துரைக்கிறார்கள். அந்த பேச்சுவார்த்தையில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியாவின் நிலையை பலவீனப்படுத்தியிருந்தனர். அப்படி நாட்டின் விவசாயிகள், ஏழைகள் நலன் மட்டுமின்றி மொத்த நாட்டையும் காங்கிரஸ்தான் விற்றுவிட்டது; மோடி அல்ல.

இந்தியாவை விற்பதற்கான துணிச்சல் கொண்ட ஒருவரும் இன்றுவரை பிறக்கவில்லை. பிரதமர் மோடி அதை ஒருபோதும் செய்யமாட்டார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் இந்தோனேஷியாவின் பாலியில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் இந்தியா அமைதிப்பிரிவில் சமரசம் செய்தது.

பிரதமர் மோடி எப்போதும் இந்தியாவின் நலனுக்காகவே செயல்படுகிறார். ஆனால் காங்கிரஸ், பாலி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் உலக வர்த்தக அமைப்பின் முன் சரணடைந்தது.

ஏழைகள், புவிசார் அரசியல், எரிசக்தி மற்றும் நிதியை ஆயுதமாக்குதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கவலை வெளியிட்டிருந்தார். ஆனால் இந்த சவால்களை பட்ஜெட் ஒப்புக்கொண்டுள்ளது. அவர் பட்ஜெட்டை முழுமையாக வாசிக்காமல் இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்