Paristamil Navigation Paristamil advert login

ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: மத்திய அரசு

ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: மத்திய அரசு

12 மாசி 2026 வியாழன் 07:22 | பார்வைகள் : 303


லோக்சபாவில்  தவறான மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை எந்த நோட்டீசும் அளிக்காமல் கூறிய காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும்,'' என  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.

லோக்சபாவில் இன்று ராகுல் பேசும்போது, மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் நாட்டை விற்றுவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: பொய் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்திய பிறகு ராகுல் வேண்டும என்றே ஓடினார். மத்திய அமைச்சரின் பதிலை கேட்க அவருக்கு விருப்பமில்லை.  எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஏற்ற தீவிரமான குணமோ அல்லது தீவிரமான குணம் கொண்ட ஒரு நபரோ நம்மிடம் இல்லாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவைக்குள் உள்ளே சொன்னதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் எனவும், வெளியே பொய் சொன்னது குறித்து நோட்டீஸ் அனுப்புவது என பாஜ முடிவு செய்துள்ளது.  சபாநாயகரிடம்  நோட்டீஸ் அளிப்போம்.   தனது பேச்சை உறுதி செய்ய வேண்டும் என ராகுல் உறுதிமொழி அளித்தார். ஆனால், அவர் பொய் சொன்னதால், அவரால் உறுதி செய்ய முடியாது. அவர் அவையில் பொய் சொன்னார்.

பொய்யான தகவல் தெரிவித்து அவையை தவறாக வழிநடத்திய ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க உள்ளோம்.  லோக்சபா மற்றும் ராஜ்யசபாவிற்கு என  தெளிவான நடத்தை விதிகள் உள்ளன.   ஒரு உறுப்பினருக்கு எதிராக  குற்றச்சாட்டு கூற வேண்டும் என்றால், அதற்கு முன்னதாக  நோட்டீஸ் வழங்க வேண்டும்.  அவையில் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை வழங்க வேண்டும் எனக்கூறினேன். மத்திய அரசு, பிரதமர் மோடிக்கு எதிராக ஆதாரமற்ற தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார்.  இந்தியா, இந்திய நலன்களை  பிரதமர் மோடி விற்று விட்டார் என எந்த அடிப்படையில் ராகுல் கூறுகிறார். எந்த நோட்டீசும் அளிக்காமல் மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் புரிக்கு எதிராக எப்படி குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.

அவரது தவறான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட அனைத்தும்  நீக்கப்பட வேண்டும்.  அவர்  கூறிய பொய்களை நீக்கவேண்டும்.   இந்த நாட்டை யாராலும் விற்க முடியாது. யாராலும் வாங்க முடியாது.  யாரோ ஒருவர் நாட்டை விற்று விட்டார். யாரோ ஒருவர் நாட்டை வாங்கிவிட்டார் என ராகுல் கூறுகிறார். ஆனால், நாட்டை விற்பது அல்லது வாங்குவது குறித்து  யாராலும்  சிந்திக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்."

வர்த்தக‌ விளம்பரங்கள்