Paristamil Navigation Paristamil advert login

ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது: முதல்வர் ஸ்டாலின்

ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது: முதல்வர் ஸ்டாலின்

11 மாசி 2026 புதன் 15:47 | பார்வைகள் : 135


ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது. 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்'' என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

இது குறித்து, இந்தியா டுடே தொலைக்காட்சி கருத்தரங்கில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

கருத்துக்கணிப்பின் படி திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே உள்ள ஓட்டு வித்தியாசம் 12 சதவீதம். கருத்து கணிப்பை உண்மையாக்குவோம். 3 சதவீதம் ஓட்டு வித்தியாசம் இருந்தாலே பெரும்பாலான இடங்களில் வெற்றி கிடைக்கும். கருத்துக்கணிப்பு முடிவுகள் எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. 65க்கும் மேற்பட்ட விருதுகள் தமிழகத்தை தேடி வந்துள்ளன.

மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக செயல்படுவதிலும் திமுகவுக்கு குடைச்சல் கொடுப்பதில் கவனம் செலுத்துகிறது. தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் முன்னோடி திட்டங்களாக மாறியுள்ளன. திமுக அரசுக்கு குடைச்சல் கொடுக்கும மத்திய அரசாலேயே தமிழகத்தின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை. அனைத்து வகை புள்ளி விவரங்களிலும் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.

மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. திமுக அரசு தொடர்ந்தால் தான் தமிழகம் நன்றாக இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

பல நன்மைகளை செய்து வரும் தமிழக அரசுக்கு மத்திய அரசு பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் ஜீரோ கொடுத்த பாஜவுக்கு தேர்தலில் மக்கள் ஜீரோவை திருப்பி தருவர். மத்திய அரசு தமிழகத்துக்கு துரோக்கத்தையும், அநீதியையுமே செய்து வருகிறது.

பிறகு கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது என்பது எங்களுக்கும் தெரியும். அவர்களுக்கும் தெரியும்.

இடையில் சிலர் குழப்பம் ஏற்படுத்த திட்டமிட்டு சதி செய்கின்றனர். திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் நன்றாக இருக்கும். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்.

கூட்டணியில் ஏதாவது முறிவு ஏற்படுமா என்பதற்காக சிலர் திட்டமிட்டு சதி செய்கின்றனர்.

சிலரின் சதி பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆட்சியில் பங்கு என்ற பேச்சே தற்போது எழவில்லை.

ராகுல் சகோதரர்

அரசியலை தாண்டி என்னுடைய சகோதரர் போன்றவர் ராகுல். திமுக, காங்கிரஸ் இணைந்து தான் சட்டசபை தேர்தலை சந்திக்கும். 2021ம் ஆண்டு தேர்தலை விட 2026ம் ஆண்டு தேர்தல் கடினமாக இருக்கும் என்பது எதிர்க்கட்சிகள் மக்களை குழப்ப பேசும் பேச்சு. கருணாநிதியிடம் இருந்து உழைப்பை கற்றுக் கொண்டேன், அதையே எனது மகனுக்கு கற்றுத் தருகிறேன். எதையும் எதிர்பார்க்காமல் உழைத்தால் தான் அரசியலில் முன்னுக்கு வர முடியும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்