Paristamil Navigation Paristamil advert login

அன்புமணிக்கே பாமக; வழக்கை முடித்த டில்லி ஐகோர்ட்

அன்புமணிக்கே பாமக; வழக்கை முடித்த டில்லி ஐகோர்ட்

10 மாசி 2026 செவ்வாய் 06:04 | பார்வைகள் : 359


பாமக பிரச்னை தொடர்பான வழக்கில் டில்லி ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷனின் கோரிக்கை ஏற்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாமகவின் அதிகாரப்பூர்வ மற்றும் தேர்தல் கமிஷனின் அங்கீகரிக்கப்பட்ட கட்சி தலைவராகிறார் அன்புமணி. மாம்பழம் சின்னமும் சொந்தமாகும் வாய்ப்புகள் இருக்கிறது.

பாமக உரிமை தொடர்பாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் அதன் நிறுவனர் ராமதாஸ் இருவரிடையே தொடர்ந்த மோதல் மூண்டு வருகிறது. இந்த மோதல்களுக்கு நடுவே, கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அன்புமணி முகவரிக்கு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியது. கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்றும் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளித்து இருந்தது.

இதையடுத்து, இந்த அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி, ராமதாஸ் தரப்பில் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், பாமக அங்கீகாரம் பெற்ற கட்சி இல்லை என்பதால் தேர்தல் கமிஷன் தலையிட முடியாது, தேவையிருப்பின் கட்சி பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பின் அடுத்தக் கட்டமாக பாமகவின் மாம்பழம் சின்னம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரி ராமதாஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கலாக, அதற்கு பதில் அளிக்குமாறு நீதிமன்றம் தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், டில்லி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு தேர்தல் கமிஷன் முறையிட்டு, பதில் மனுவையும் தாக்கல் செய்திருந்தது.

பதில் மனுவில் தேர்தல் கமிஷன் கூறியிருப்பதாவது;

கட்சியில் பிரச்னை எழுந்த பின்னர், ஆவணங்கள் அடிப்படையில் முடிவை எடுக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை. ஆனால், கட்சியில் பிரச்னை மற்றும் உரிமை கோரல் விவாகரம் எழுவதற்கு முன் அளிக்கப்படும் ஆவணங்கள் அடிப்படையில் அங்கீகரிக்க அதிகாரம் உள்ளது.

மேலும், 2026ம் ஆண்டு வரை பாமக தலைவர் அன்புமணியின் பதவிக்காலம் உள்ளது. எனவே அன்புமணி அளித்த ஆவணங்களை கொண்டு அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆவணங்களின் அடிப்படையில் அவர்தான் தலைவர். எனவே அன்புமணிக்கே கட்சி, சின்னம் சொந்தம்.

இவ்வாறு தேர்தல் கமிஷன் தமது தரப்பு வாதத்தை பதில் மனுவில் முன் வைத்தது.

இதை டில்லி ஐகோர்ட்  ஏற்றுக் கொண்டது. தற்போதுள்ள சூழலில் பாமக வழக்கு தொடர்பான எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறி வழக்கையும் முடித்து வைத்துள்ளது. இதன் மூலம் அன்புமணிக்கே பாமக என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்