திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்!
27 மாசி 2026 வெள்ளி 10:14 | பார்வைகள் : 277
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், மீண்டும் கட்சியில் எப்படியாவது சேர்ந்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். இதற்காக, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவை தொடங்கி நடத்தி வந்தார். தமிழக சட்டசபைக்கு சில வாரங்களில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அமமுகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள இபிஎஸ் சம்மதித்து விட்டார்.
ஓபிஎஸ், மீண்டும் அதிமுகவில் தன்னை இணைக்க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததை உணர்ந்து விட்டார். மேலும், தன்னுடைய ஆதரவாளர்களாக இருந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவுக்கு சென்று விட்டனர். அதேபோல, கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தவெகவுக்கு தாவி விட்டனர். எம்பி தர்மர் மீண்டும் இபிஎஸ் பக்கமே சென்று விட்டார். பண்ருட்டி ராமச்சந்திரனும் புதிய கட்சியை தொடங்கி விட்டார். சசிகலா புதிய கட்சி தொடங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில் அடுத்தகட்ட முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டார். இதனால், அவர் திமுகவில் சேர இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே, முதல்வர் ஸ்டாலினை அடுத்தடுத்து சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், சென்னை நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த ஓபிஎஸ், இன்று காலை அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து, இருவரும் ஒரே காரில் அண்ணா அறிவாலயத்திற்கு புறப்பட்டு சென்றனர். அங்கு, கூடியிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சர்கள் கேஎன் நேரு, எவ வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஆகியோரும் வந்திருந்தனர்.
பிறகு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். முதல்வர் ஸ்டாலினும் அவரை ஆரத்தழுவி வரவேற்றார். தொடர்ந்து, ஸ்டாலின் முன்னிலையில் திமுக உறுப்பினருக்கான படிவத்தில் ஓபிஎஸ் கையெழுத்திட்டார்.
ஓபிஎஸ் உடன், மகனும், முன்னாள் எம்பியுமான ரவிந்திரநாத் மற்றும் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் உள்பட ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்தனர்.
அதிமுக சார்பில் 3 முறை முதல்வரான ஓபிஎஸ், திமுகவில் இணைந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டால், திமுக சார்பில் தேனி தொகுதியில் அவர் போட்டியிட முயற்சி எடுப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதைத் தொடர்ந்து, தேனி போடிநாய்க்கனூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். சட்டப்பேரவை செயலரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
ஓபிஎஸை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; முன்னாள் முதல்வரும், அருமைச் சகோதரருமான ஓ.பன்னீர்செல்வம் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன். திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார். 2026 சட்டசபை தேர்தல் என்பது தமிழகத்திற்கும், பாசிச பாஜவுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கட்சி கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.
சசிகலா வெளியிட்ட அறிக்கை;
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக மூத்த முன்னோடியுமான ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில், தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக்கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது.
ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் வேறு யாருமில்லை. தான் மட்டும்தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள், தன்னை சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், திமுகவினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து அதிமுகவில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வரும் துரோகிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது.
இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் எனது தலைமையில் எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தங்களும், ஜெயலலிதாவின் வழிவந்த சிங்கங்களும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்




Ajouter
Annuaire
Scan