Paristamil Navigation Paristamil advert login

அதிகார மமதையில் பேயாட்டம் போடும் தி.மு.க.,வுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்

அதிகார மமதையில் பேயாட்டம் போடும் தி.மு.க.,வுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்

24 மாசி 2026 செவ்வாய் 15:38 | பார்வைகள் : 166


அதிகார மமதையில் பேயாட்டம் போடும் தி.மு.க.,வினருக்கு, வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

கடந்த 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல், ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களும், சமூக விரோதிகளும் தங்களுடைய அடாவடி செயல்களுக்கு, 'லைசென்ஸ்' கிடைத்தது போல் இன்று வரை பேயாட்டம் போட்டு வருகின்றனர். வரும் தேர்தலில் அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.  

ஓசூரில் சிவமூர்த்தி வீட்டின் முன், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டதை, காரில் வந்த ஆதித்யாவும், அவரது இரண்டு நண்பர்களும் கேள்வி கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவர்கள் காரை ஓட்டிச் சென்று, சிவமூர்த்தி, கிருபாகரன், அம்சவள்ளி மற்றும் ஆறு மாத குழந்தை மீது மோதி உள்ளனர்.  

இதில், படுகாயமடைந்த அரசு ஊழியரான சிவமூர்த்தி உயிரிழந்தார். அவரை காரை ஏற்றிக் கொன்றதாக அறியப்படும் ஆதித்யாவின் தந்தை சீனிவாசன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்.  

இதுபோல, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினத்தில் அங்காளம்மன் கோவிலில் மகா சிவராத்திரி மயானக் கொள்ளை நிகழ்ச்சியில், தி.மு.க., ஒன்றிய செயலர் மகேந்திரன் என்பவரது மகன் ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியதில், 15 பேர் காயமடைந்து உள்ளனர்.

இப்படி தமிழகம் முழுதும் பல சம்பவங்கள் நடக்கின்றன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காமல், 'தமிழகத்திற்கும், டில்லிக்கும் போர்' என்று ஸ்டாலின் வீர வசனம் பேசி, பிரச்னையை மடைமாற்றம் செய்து வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பழனிசாமி வெளியிட்ட மற்றொரு அறிக்கை:

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த முதலுாரில், பிளஸ் 1 வகுப்பு மாணவன் மீது, பள்ளியிலேயே சக மாணவர்கள், ஜாதி வெறியில் கொலைவெறி தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

தாக்குதல் நடந்து நான்கு நாட்களாகியும், இதுவரை தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சம்பவமெல்லாம், எந்த மாடலில் வருகிறது என்பதற்கு, ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். இப்படி மாணவர்கள் இடையே ஜாதி வெறி வளர்ந்து நிற்பதற்கு, யார் பொறுப்பு?  

பிரசார மேடை போட்டு, தன் ஆட்சி குறித்து, இல்லாத பெருமைகளை, 'ரீல் ரீலாக' அளந்து விடும் முதல்வர் ஸ்டாலின், உண்மையிலேயே நடக்கும் இந்த சமூக அநீதிகள் குறித்து, இனியாவது பேசுவாரா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்