Paristamil Navigation Paristamil advert login

திட்டத்தை முடக்க முயற்சிக்கும் பாஜ அரசு; உதயநிதி குற்றச்சாட்டு

திட்டத்தை முடக்க முயற்சிக்கும் பாஜ அரசு; உதயநிதி குற்றச்சாட்டு

23 மாசி 2026 திங்கள் 13:16 | பார்வைகள் : 275


தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முடக்க பாஜ அரசு முயற்சித்ததாக கோவையில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக மேற்கு மண்டல இளைஞர் அணி மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது;  இந்த மாநாட்டுக்கு 80 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்று இருக்கிறீர்கள்.  இந்தியாவிலேயே எந்தக் கட்சியும் செய்யாத வகையில், இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பை மாநாடு போல தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறோம். ஆனால், தமிழகத்தில் பல கட்சிகள் எத்தனை பூத் இருக்கிறது என்பது தெரியாமல் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது தான் கணக்கெடுத்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கும் பல எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் இளைஞரணியில் பயிற்சி எடுத்து தாய் கழகத்திற்கு போனவர்கள்.

ஆட்சி மற்றும் அரசியலில் இந்தியாவுக்கு வழிகாட்டும் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். அரசியலை எடுத்துக் கொண்டால், பாஜவுக்கு எதிரான ஒரு ஜனநாயகப் போரை ஸ்டாலின் தலைமையில் எடுக்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள பிற அரசியல் கட்சி தலைவர்கள் பேசிக் கொள்கிறார்கள். ஆட்சியைப் பொறுத்தவரையில் மகளிர் உரிமைத் தொகை உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முடக்க பாஜ அரசு முயற்சித்தது. ஆனால், 3 மாத நிதி மற்றும் கோடை கால சிறப்பு நிதி என ரூ.5 ஆயிரத்தை முதல்வர் ஸ்டாலின், மகளிர் வங்கிக் கணக்கில் செலுத்தினார்.

பிரதமர் மோடி அடிக்கடி டிவியில் வருவார். அப்படி வரும் போதெல்லாம் மக்களுக்கு ஒரு பயம் வந்திடும். இதே முதல்வர் ஸ்டாலின் டிவியில் வந்தால் மக்களுக்கு மகிழ்ச்சி வந்து விடும்.  தமிழகம் 11.19 சதவீத வளர்ச்சியுடன் இந்தியாவிலே சிறந்த மாநிலமாக உருவாகியிருக்கிறது. இதற்கு என்னவெல்லாம், இடையூறு ஏற்படுத்தலாம் என்று திட்டமிட்டு மத்திய பாஜ அரசு செயல்படுகிறது. மொழி, கல்வி, நிதி போன்ற உரிமைகளை பறிக்க பார்க்கிறார்கள்.

இதுவரை தமிழகம் பக்கமே எட்டிப் பார்க்காத பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழகம் வரத் துவங்கி விட்டார்கள். அவர்கள் மட்டுமே வருவார்கள், நிதி ஏதும் வராது.

அண்மையில் இபிஎஸ் தியேட்டருக்கு போய் எம்ஜிஆர் படம் பார்த்தார். அப்போது, அவர் அழுகிறார். இந்நேரம் எம்ஜிஆர் உயிருடன் இருந்திருந்தால், இபிஎஸை பார்த்து என் கட்சியை இப்படி ஆக்கி விட்டீர்களே என்று எப்படி அழுதிருப்பார் என்று யோசித்து பார்த்தேன். 2019ல் அதிமுகவை பாஜவுக்கு அடகு வைத்தார். 2021ல் அதிமுகவை பாஜவுக்கு லீசுக்கு விட்டார். இப்போது அதிமுகவை பாஜவுக்கு விற்று விட்டார்.

தன்னுடைய சுயநலத்திற்காக இபிஎஸ் அதிமுகவை அழிவு பாதையில் கொண்டு செல்கிறார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை அறிவுப் பாதைக்கு அழைத்து செல்கிறார். நாங்கள் இ.டி.,க்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம். தமிழகத்திற்கு டபுள் இன்ஜின் அரசு வேண்டும் என்று பிரதமர் மோடி சொல்கிறார்.  தமிழகத்தின் இன்ஜின் பலமான திராவிட மாடல் இன்ஜின். எப்போதும் தனி வழியில் முன்னேறிப் போகும் இன்ஜின். பாஜவின் கலவர அரசியலை தமிழக மக்கள் என்றும் உள்ளே விட மாட்டார்கள். இப்போது நடக்க இருப்பது 8 கோடி மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் போர், இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்