Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவும், பிரேசிலும் ஜனநாயக சகோதரர்கள்; இரு நாட்டு உறவுக்கு அதிபர் லுாலா புகழாரம்

இந்தியாவும், பிரேசிலும் ஜனநாயக சகோதரர்கள்; இரு நாட்டு உறவுக்கு அதிபர் லுாலா புகழாரம்

23 மாசி 2026 திங்கள் 10:31 | பார்வைகள் : 308


இந்தியா, பிரேசில்  இடையிலான நல்லுறவுக்கு புகழாரம் சூட்டிய அதிபர் லுாலா, ' இரு நாடுகளும் ஜனநாயக சகோதரர்கள்' என்று வர்ணித்தார்.

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுாலா டா சில்வா இந்தியாவுக்கு வந்து உள்ளார். அவர் டில்லியில் நடந்த ஏஐ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார். டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி-பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் இன்று டில்லியில் நிருபர்களிடம் பிரேசில் அதிபர் லூலா டா சில்வா கூறியதாவது:

நான் முதன்முறையாக 2005ம் ஆண்டு இங்கு வந்தபோது, ​​பிரேசிலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம் 2.4 பில்லியன் டாலர்கள் மட்டுமே இருந்து. இப்போது 10.5 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் 20 பில்லியன் டாலர்களை எட்ட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளதாக பிரதமர் மோடி எனக்கு உறுதியளித்தார். இரு நாடுகள் இடையே உள்ள பொருளாதார உறவுகள் வலுவாக இருக்கிறது.

விரைவில் 30 பில்லியன் டாலர் வர்த்தகத்தை எட்டுவோம். சுகாதாரத் துறையில், ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. இந்தியா- பிரேசில் இடையேயான உறவை பாராட்டுகிறேன்.  இரு நாடுகளும் ஜனநாயக சகோதரர்கள்.இந்தியா போன்ற ஒரு நாட்டுடனான பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானது.

ஏனென்றால் பழகிய பணக்கார நாடுகளுடன், பேச்சுவார்த்தைகளில் ஒருவித சர்வாதிகாரம் இடம்பெறும். பிரேசில், இந்தியா ஆகிய இருநாடுகளுக்கு  இடையே  நிறைய ஒற்றுமைகள் உள்ளன. பிரேசிலில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறேன் இவ்வாறு அதிபர் லூலா டா சில்வா கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்