Paristamil Navigation Paristamil advert login

பதவி வேண்டுமென்பதற்காக எதையும் செய்ய துணிந்துவிட்டார் ஓபிஎஸ் - டிடிவி தினகரன்

பதவி வேண்டுமென்பதற்காக எதையும் செய்ய துணிந்துவிட்டார் ஓபிஎஸ் - டிடிவி தினகரன்

22 மாசி 2026 ஞாயிறு 13:16 | பார்வைகள் : 290


தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ் எதையும் செய்ய துணிந்துவிட்டார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ் எதையும் செய்ய துணிந்துவிட்டார் என குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா இருந்தவரை பரதனாக நடித்த ஓபிஎஸ், ஜெயலலிதாதான் தெய்வம்; ஆட்சி வேண்டும்; கட்சியை ஒன்றிணைப்போம் என கூறியவர்கள் எல்லோரும் திமுகவின் ஏஜென்ட்களாக செயல்படுவது வெட்டவெளிச்சமாகி வருகிறது எனவும் விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், எம்எல்ஏ ஐயப்பன் முதலமைச்சர் ஸ்டாலினை வாழ்த்தி பேசியது, திமுகவில் இணைவது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால், தொண்டர்கள் தெய்வமாக போற்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும்விதமாக பேசியதை, கோடானுகோடி தொண்டர்களும், தமிழ்நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்கள் பணியாற்ற வேண்டும் என மற்றொரு கட்சிக்கு ஓபிஎஸ் செல்லலாம்.

ஆனால், ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை பரதனாக நடித்துவிட்டு, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதலமைச்சராகி, கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக 2017-ம் ஆண்டு திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தவர் ஓபிஎஸ். இருப்பினும் ஓபிஎஸ்ஸை பிரதமர் மோடி பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டு, ஈபிஎஸ்ஸிடன் பேசி துணை முதல்வராக கொண்டுவந்தார். இன்றைக்கு பொதுச்செயலாளரை தொண்டர்களே தேர்வு செய்ய வேண்டும் என்கிறார். ஓபிஎஸ்ஸை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யும்போது கட்சியின் சட்டத்தை எப்படி உருவாக்கினார்கள் என்பது அவருக்கே தெரியும் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஓபிஎஸ் தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய துணிந்துவிட்டார். ஓபிஎஸ் திமுகவில் சேரட்டும்; பதவிக்கு வரட்டும், வராமலும் போகலாம். அதை மக்கள் தீர்மானிப்பார்கள். ஆனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிப்பதை மன்னிக்க முடியாது. உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். இதைவிட சிறப்பு துரியோதன கும்பல் போல பேசியதை முதல்வர் கைதட்டி ரசித்தது, புன்முறுவலாக இருந்தது. இதற்கேற்ப ஓ.பி.எஸ்., ஐயப்பன் இருவரும் நடந்துகொண்டது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருக்கும் இதைவிட தீங்கை யாரும் இழைக்க முடியாது என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் ஜெயலலிதாவின் கட்சியை ஒன்றிணைப்பேன், ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவேன் என சொன்னவர்கள் எல்லாம் திடீரென கிளம்பி டம்மி வேட்பாளர்களை நிறுத்துகின்றனர். இன்னும் டம்மியாக சிலர் திமுகவுக்கு சேவை செய்யவும் கிளம்பிவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கெல்லாம் ஜெயலலிதாவின் தொண்டர்கள் பாடம் புகட்டுவார்கள். ஜெயலலிதாதான் தெய்வம்; ஆட்சி வேண்டும், கட்சியை ஒன்றிணைப்போம் என கூறியவர்கள் எல்லோரும் திமுகவின் ஏஜென்ட்களாக செயல்படுவது வெட்டவெளிச்சமாகி வருகிறது.

மேலும், ஒரு கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய ஆறு மாதங்கள் ஆகும்; மூன்று மாதங்களில் முடியாது. எனவே, யாராவது கட்சி ஆரம்பிப்பேன் என்றால் யாரும் ஏமாற வேண்டாம். இன்னொரு கட்சியில் இருந்து ஆட்களை பிடித்து வேட்பாளராக தேர்தலில் நிறுத்துவது விந்தையாகும். ஓபிஎஸ் பரதனாக காட்டினார்; இன்னும் சிலரின் சொரூபம் விரைவில் வெளிப்படும் எனவும் டிடிவி தினகரன் கடுமையாக சாடியுள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்