Paristamil Navigation Paristamil advert login

அஜித் பவார் உயிரிழப்பில் மர்மம்? விரிவாக விசாரிக்க மகன் வலியுறுத்தல்

அஜித் பவார் உயிரிழப்பில் மர்மம்? விரிவாக விசாரிக்க மகன் வலியுறுத்தல்

20 மாசி 2026 வெள்ளி 07:17 | பார்வைகள் : 333


மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும், என அவரது மகன் ஜெய் பவார் வலியுறுத்தியுள்ளார்.  

மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. புனே மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பாராமதிக்கு, துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் கடந்த ஜன., 28 ம் தேதி சிறிய ரக விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.  

அப்போது பாராமதி அருகே விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியதில், அஜித் பவார் உள்ளிட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியது.

குறிப்பாக சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன், தனது தேசியவாத காங்கிரஸ் கட்சியை இணைக்க அஜித் பவார் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்ட சூழலில், இந்த விபத்து நிகழ்ந்தது அரசியல் ரீதியாக பல சந்தேகங்களை எழுப்பின.  

இந்நிலையில், தனியார் விமான நிறுவனத்தின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாக, அஜித் பவாரின் மகன் ஜெய் பவார் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

விமானத்தின் கருப்பு பெட்டி அவ்வளவு எளிதில் சேதமடையாது. மஹாராஷ்டிரா மக்களுக்கு நடந்த உண்மை வெளிப்படையாக தெரிய வேண்டும். எனவே, இந்த விவகாரம் குறித்து அரசு விரிவாக விசாரணை நடத்த வேண்டும்.

அலட்சியம் மற்றும் முறைகேடுகள் காரணமாக இந்த விபத்து நடந்து இருப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றன. எனவே, பாரம்பட்சமின்றி, விரிவாக விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரபுல் படேலும், விபத்துக்கு விமான நிறுவனமே காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், விமானி அலட்சியமாக பணியாற்றியதே அஜித் பவார் உயிரிழக்க காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்