ராஜ்யசபாவில் 6 தமிழக எம்.பி.களுக்கு மார்ச் 16ல் தேர்தல்
19 மாசி 2026 வியாழன் 14:43 | பார்வைகள் : 149
ராஜ்யசபாவில் காலியாகும் 37 எம்.பி., பதவிகளுக்கு, மார்ச் 16ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த ஆறு எம்.பி., பதவிகளில், தி.மு.க.,வுக்கு நான்கு, அ.தி.மு.க.,வுக்கு இரண்டு எம்.பி.,க்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. சட்டசபை தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமாக, இந்த தேர்தல் அமையும் என கருதப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன், ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தேர்தல், ஆறு எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்கு மட்டுமின்றி, சட்டசபை தேர்தல் கூட்டணியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றுவதாக அமையும் என்பதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காலியாகும் ஆறு பதவிகள்
தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி.,க்களாக உள்ள என்.ஆர்.இளங்கோ, பி.செல்வராஜ், சிவா, கனிமொழி சோமு; அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தம்பிதுரை, த.மா.கா., தலைவர் வாசன் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்., 2ம் தேதி நிறைவடைகிறது. இதையொட்டி, அந்த ஆறு பதவிகளுக்கும், மார்ச் 16ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபையில் தற்போதுள்ள எம்.எல்.ஏ.,க்கள் பலத்தின் அடிப்படையில், தி.மு.க.,வுக்கு நான்கு எம்.பி.,க்கள், அ.தி.மு.க.,வுக்கு இரண்டு எம்.பி.,க்கள் கிடைக்கக்கூடும் என தெரிகிறது.
தி.மு.க., கூட்டணியில் நான்கு பேர், அ.தி.மு.க., கூட்டணியில் இருவர் மட்டும் நிறுத்தப்பட்டால், போட்டியின்றி ஆறு பேரும் தேர்வு செய்யப்படுவர். கூடுதல் வேட்பாளர்களை, இரு கட்சிகளும் களத்தில் இறக்கினால் தான், ஓட்டுப்பதிவு நடக்கும்.
கடும் போட்டி
இந்த தேர்தல் முடிந்த சூட்டோடு, சட்டசபை தேர்தலும் வர உள்ளதால், இரு கட்சிகளும் கூடுதல் வேட்பாளர்களை நிறுத்த வாய்ப்பில்லை. எனவே, ஆறு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.
அதேபோல், இப்பதவிகளை பெறுவதில், இரு கட்சிகளிலும் கடும் போட்டி ஏற்படுவதும் உறுதியாகி உள்ளது. இவ்விரு கட்சிகளின் தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகளும், ராஜ்யசபா 'சீட்' பெற விரும்புகின்றன.
தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., ஆகியவை, தங்களுக்கு ஒரு 'சீட்' ஒதுக்குமாறு கேட்கின்றன. தி.மு.க.,வுக்கும், காங்கிரசுக்கும் இடையே தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த, ராஜ்யசபா சீட் உதவும் என கூறப்படுகிறது.
இருகட்சிகளுக்கும் சவால்
அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வை இணைக்க பேச்சு நடத்தியபோது, தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என, அக்கட்சி தலைமை நிபந்தனை விதித்த தகவல் வெளியானது. த.மா.கா., தலைவர் வாசனும், அ.தி.மு.க., - பா.ஜ., ஆதரவுடன் மீண்டும் எம்.பி., ஆக முடியுமா என எதிர்பார்க்கிறார். அதேபோல், பதவியிழக்கும் தம்பிதுரை உள்ளிட்டோர், அ.தி.மு.க.,வில் வாய்ப்பை எதிர்பார்க்கின்றனர்.
இதனால், ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது, இரு கட்சிகளுக்கும் சவாலாக மாறியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan