Paristamil Navigation Paristamil advert login

இண்டி கூட்டணி தலைமை வெற்றிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும்: உத்தவ் சிவசேனா

இண்டி கூட்டணி தலைமை வெற்றிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும்: உத்தவ் சிவசேனா

19 மாசி 2026 வியாழன் 07:16 | பார்வைகள் : 184


இண்டி கூட்டணிக்கு தலைமைத்துவ வெற்றிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

எதிர்கட்சியான இண்டி கூட்டணியில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டுவரும் நிலையில், அடுத்து கேரளா, அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்த நிலையில் மாஹராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் இன்று (பிப்ரவரி 18) தலையங்க கட்டுரை வெளியாகி உள்ளது.

அதில் இண்டி கூட்டணிக்கு தலைமை வெற்றிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

நாட்டின் தற்போதைய சூழலை எதிர்கொள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அல்லது தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோரில் ஒருவரை முன்னிறுத்துவது குறித்து கூட்டணி சிந்திக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியில் நிலவும் முரண்பாடுகள், மூத்த ஆலோசகர்களின் மாறுபட்ட கருத்துக்கள் கூட்டணியின் வேகத்தைக் குறைக்கிறது.

கேரளா, அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு,புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு முன்பே, கூட்டணி ஒரு ஒருங்கிணைந்த முடிவை எடுக்க வேண்டும்.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், - காங்கிரஸ் மோதல் மற்றும் கேரளாவில் இடதுசாரிகளுடனான போட்டி போன்ற 'நட்பு ரீதியிலான மோதல்கள்' பா.ஜ.,விற்கு சாதகமாகிவிடும்.

மாநில உரிமைகளுக்காக வலுவாகக் குரல் கொடுக்கும் ஸ்டாலின் தலைமைக்கு உகந்தவர் என மணிசங்கர் அய்யர் கூறியுள்ளது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

ஒரு வலிமையான பெண் தலைவராக மம்தா பானர்ஜி தேசியத் தலைமைக்கு பொருத்தமானவர் என சஞ்சய பாருவின் கருத்தும் கூறப்பட்டுள்ளது.

இண்டி கூட்டணி வெறும் 'தேர்தல் நேரத்தில் மட்டும் விழித்துக் கொள்ளும்' அமைப்பாக இல்லாமல், தெளிவான திசையுடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு சாம்னாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்