ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து குறித்து விரைவில் முடிவு: மத்திய அரசு தகவல்
18 மாசி 2026 புதன் 12:36 | பார்வைகள் : 162
ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்து உள்ளார்.
ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அர்ஜூன் ராம் மேக்வால் பேசியதாவது: இது ஒரு மிகவும் உணர்திறன் வாய்ந்த பிரச்சினை என்றாலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா லோக் சபையில் ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். மிக விரைவில் மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அர்ஜூன் ராம் மேக்வால் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் அப்துல்லா கூறியதாவது: விரைவில் நல்ல செய்தியைக் கேட்போம் என்று மத்திய அமைச்சர் கூறியதாக நான் கேள்விப்பட்டேன். ஒன்றரை வருட காத்திருப்பு ஆகிவிட்டது. அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை என்று நம்புகிறோம்.
அது முடியும் வரை ஜம்மு காஷ்மீரில் யாரும் திருப்தி அடைய மாட்டார்கள். அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. இப்போது அதைப் பெறுவோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இன்னும் அதைப் பெறவில்லை. நாங்கள் நம்பிக்கையை கைவிடவில்லை. மாநில அந்தஸ்து பெற தொடர்ந்து முயற்சி செய்வோம். இவ்வாறு அப்துல்லா கூறினார்.
ஆகஸ்ட் 5, 2019 அன்று, மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை ரத்து செய்தது. ஜம்மு- காஷ்மீரை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் அரசு பிரித்தது. ஏற்கனவே, ஜம்மு-காஷ்மீரின் யூனியன் பிரதேச அந்தஸ்து தற்காலிகமானது என்றும் அதன் மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan