Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் இணைய வழி மோசடியில் ஈடுப்பட்ட 11 பேருக்கு மரண தண்டனை

சீனாவில் இணைய வழி மோசடியில் ஈடுப்பட்ட  11 பேருக்கு மரண தண்டனை

30 தை 2026 வெள்ளி 11:06 | பார்வைகள் : 495


மியன்மாரின் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கானோரை அடிமைகளாக வைத்து, சர்வதேச அளவில் பில்லியன் கணக்கான டொலர்களை இணையம் வழியாக மோசடி செய்து வந்த 'மிங்' மாபியா கும்பலைச் சேர்ந்த 11 பிரதான உறுப்பினர்களுக்கு சீனா மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

கொலை, சட்டவிரோதமாகச் சிறைவைத்தல், பண மோசடி மற்றும் சூதாட்ட விடுதிகளை நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2015 முதல் 2023 வரை இவர்கள் சுமார் 1.4 பில்லியன் டொலர் (10 பில்லியன் யுவான்) வருமானத்தை ஈட்டியதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மியன்மாரின் 'லொக்கைங்' (Laukkaing) நகரை மையமாகக் கொண்டு இயங்கிய இவர்கள், வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ஆயிரக்கணக்கான சீன இளைஞர்களைக் கடத்தி வந்து, துப்பாக்கி முனையில் இணைய வழி பண மோசடிகளில் ஈடுபடுத்தியுள்ளனர்.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் மிங் குவோபிங் (Ming Guoping), மிங் சென்சென் (Ming Zhenzhen) ஆகிய முக்கிய நபர்களும் அடங்குவர்.

இந்தக் குடும்பலின் தலைவரான மிங் சூச்சங் (Ming Xuechang), 2023-இல் கைது செய்யப்பட்டபோது சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் கடும் அழுத்தத்தைத் தொடர்ந்து, மியன்மார் இராணுவ அரசாங்கம் இந்தக் கும்பலைக் கைது செய்து கடந்த 2023-ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைத்தது.

ஆசியாவைப் அச்சுறுத்தி வரும் 'இணைய மோசடி' மாபியாக்களுக்கு எதிரான சீனாவின் மிகக்கடுமையான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்